யாழ்ப்பாணத்தில் இதுவரை 49 ஆயிரத்து 280 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன – வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

Friday, June 4th, 2021

யாழ்ப்பாணத்தில் இதுவரை 49 ஆயிரத்திற்கும் சற்று அதிகமானோருக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –

கொரோனா தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 50,ஆயிரம் தடுப்பூசிகள் யாழ் மாவட்டத்திற்கு கிடைக்கப்பெற்றன. இவை சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் வழிகாட்டலுக்கு அமைவாக கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கையின் முன்னிலை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு வழங்கப்பட்டன.

இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட மே 30 ஆம் திகதி 2 ஆயிரத்து 947 பேருக்கும், மே 31 ஆம் திகதி 6 ஆயிரத்து 123 பேருக்கும், ஜூன் 1ஆம் திகதி 13 ஆயிரத்து 822 பேருக்கும், ஜூன் 2 ஆம் திகதி 23 ஆயிரத்து 454 பேருக்கும், ஜூன் 3ஆம் திகதி ஆயிரத்து 740 பேருக்கும், மொத்தமாக 48 ஆயிரத்து 86 பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்விசார் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்களுக்கும் பணியாளர்களுக்கும் 1,194 தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.

எனவே நேற்று மாலைவரை (03) மொத்தமாக 49 ஆயிரத்து 280 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சிலவகை மருந்துகள், ஊசி மருந்துகளுக்கு ஒவ்வாமை உடையவர்களுக்கும், மற்றும் வேறு ஆபத்துக்குரிய நோய் நிலைமை உடையவர்களுக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுகள் உள்ள யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் சாவகச்சேரி, தெல்லிப்பளை, ஊர்காவற்துறை, பருத்தித்துறை போன்ற ஆதார வைத்தியசாலைகளில் எதிர்வரும் சனிக்கிழமை (05) தடுப்பூசிகள் பெற்றுக்கொள்வதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு வழங்குவதற்காக தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மேலும் அடுத்த கட்டமாக வழங்கப்படவிருக்கும் தடுப்பூசிகள் விரைவில் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு தடுப்பூசிகள் கிடைக்கப்பெறுமிடத்து ஏனைய கிராம சேவையாளர் பிரிவுகளிலும் தொடர்ந்து தடுப்பூசி வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படு என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: