யாழில் மீண்டும் கொரோனா அபாயம் – தென்மராட்சியில் 16 நாள்களில் 04 மரணங்கள்; 118 பேர் பாதிப்பு – செவ்வாயன்று அவசரமாக கூடுகிறது கொரோனா ஒழிப்பு செயலணி!
Friday, November 19th, 2021இலங்கையில் கொரோனா வைரஸின் புதிய டெல்ட்டா திரிபு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய நிபுணர்கள் பிரிவு அறிவித்துள்ளது.
அதற்கமைய இலங்கையில் அண்மையில் அடையாளங்காணப்பட்ட பீ.1.617.2.28 திரிபை ஒத்த பீ.1.617.2.104 எனும் புதிய டெல்ட்டா திரிபொன்று அடையாளங்காணப்பட்டுள்ளது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் பிரதானி பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார் . அத்துடன் இந்த புதிய திரிவு அதிக வீரியமிக்கதாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பகுதியில் கொரோனாப் பரவல் மிகத் தீவிரம் அடைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், கடந்த 16 நாள்களில் மாத்திரம் 118 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 04 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அதோடு தினமும் சராசரியாக 8 முதல் 10 தொற்றாளர்கள் என்றளவில் எண்ணிக்கை உயரத் தொடங்கிவிட்டதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகப் பின்பற்றாமை காரணமாக சமூகத்தில் தொற்று தீவிரமாகப் பரவியிருப்பதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அதேவேளை தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் அனைவரும் நோய் அறிகுறிகளுடன் தாமாக வந்து அன்டிஜன பரிசோதனைக்கு தம்மை உட்படுத்திக்கொண்டதாகவும் அவர்கள் தெரிவிததுள்ளனர்.
இந்நிலையில் கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இலவச துரித அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் தரப்பினர் அறிவித்துள்ளனர்.
எனவே சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட இடங்களில் வசிப்பவர்கள் கொரோனா அறிகுறிகள் தென்படுமாயின், உடனடியாக தங்களை சுய தனிமைப்படுத்திக்கொள்ளுமாரும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அதோடு, காலதாமதமின்றி கொடிகாமம் பிரதேச வைத்தியசாலை, வரணி பிரதேச வைத்தியசாலை அல்லது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் துரித அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுமாரும் கூறிய சுகாதார அதிகாரிகள், இவற்றுக்கு மேலதிகமாக சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய மூன்று தினங்களும் காலை 8.30 மணிக்கு குறித்த பரிசோதனை தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றதாகவும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் யாழ்மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணி அவசரமாக கூடவுள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளவோரின் எண்ணிக்கை கடந்த வாரத்திலிருந்து அதிகரித்துள்ள நிலையில் யாழ் மாவட்ட கொரோனா செயலணியானது எதிர்வரும் செவ்வாய்காலை 10 மணிக்கு கூடவுள்ளதாக, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
குறித்த செயலணி கூட்டத்தின்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுள்ள நிலைமையில் எடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்படு வுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
|
|