யாழில் போதைக்கு அடிமையான 17 வயது மாணவன் – மறுவாழ்வுக்கு அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவு!

Wednesday, January 9th, 2019

போதைப்பொருளுக்கு அடிமையாகிய 17 வயது மாணவனை பொலநறுவை கந்தகாடு மறுவாழ்வு நிலையத்தில் அனுமதித்து ஒரு ஆண்டு மறுவாழ்வு வழங்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.போல் உத்தரவிட்டுள்ளார்.

ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் 17 வயது மாணவன் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிமன்ற அப்போதைய நீதிவான் எஸ்.சதீஸ்தரன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார்.

மாணவனை ஒரு வார காலத்துக்கு சான்று பெற்ற சீர்திருத்தப் பாடசாலையில் அனுமதிக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டது. வழக்கு கடந்த 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.போல் முன்னிலையில் வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சந்தேகநபர் மன்றில் முற்படுத்தப்பட்டார். அவரது தந்தையும் மன்றில் முன்னிலையானார்.

மகன் எமது சொல்லைக் கேட்பதில்லை. போதைப்பொருளுக்கு அடிமையாகி விட்டார். வீட்டிலிருந்து பொருள்களைத் திருடிச் சென்று விற்றுவிட்டு நண்பர்களுடன் சேர்ந்து போதைப்பொருள்களைப் பயன்படுத்துகிறார்.

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையிலும் சித்தியடையவில்லை. பாடசாலைக்கும் ஒழுங்காகச் செல்வதில்லை. அவரை சீர்திருத்தப் பாடசாலைக்கு அனுப்பி நல்வழிப்படுத்த வேண்டும் என மாணவனின் தந்தை மன்றிடம் கேட்டுக்கொண்டார்.

தந்தையாரின் விண்ணப்பத்தை ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனிசாமி பீற்றர் போல் மாணவனை வரும் ஒரு ஆண்டுக்கு பொலநறுவை கந்தகாடு மறுவாழ்வு நிலையத்தில் தடுத்து வைத்து மறுவாழ்வு வழங்குமாறு உத்தரவிட்டார். மாணவனின் மறுவாழ்வு நிறைவடையும் வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related posts: