மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக புதின் அணு ஆயுதத்தை பயன்படுத்தலாம் – அமெரிக்கா எச்சரிக்கை!

Friday, March 18th, 2022

மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக புதின் விரைவில் அணுஆயுத எச்சரிக்கை விடுக்கலாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

உக்ரைன் நாடு நேட்டோவில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி 24 ஆம் திகதி அந்நாடு மீது ரஷியா படையெடுத்தது.

உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் ஆகிய நகரங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன.

இதனால், உக்ரைன் – ரஷிய படைகள் இடையே தீவிர சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தபோதும் அவை தோல்வியிலேயே முடிகின்றன.

இந்த நிலையில் ரஷிய அதிபர் புதின் விரைவில் மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக அணுஆயுத எச்சரிக்கை விடலாம் என அமெரிக்க ராணுவத்தின் உளவுத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து பென்டகன் உளவுத்துறை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது –

உக்ரைன் நாட்டின் பாதுகாப்பான பகுதிகள் ரஷியாவிற்கு சவாலை தருகின்றன. இதனால் அவர்களின் மனித சக்தி மற்றும் நவீனமயமாக்கப்பட்ட ஆயுதங்களின் எண்ணிக்கை குறைகிறது.

இதன் விளைவாக நீண்டகால பொருளாதார மந்தநிலைக்கு ரஷியா உள்ளாகலாம். இந்த போர் தொடர்ந்து நீளும்பட்சத்தில் அதன் விளைவுகள் ரஷியாவை பலவீனப்படுத்தும்.

ரஷியாவின் படையெடுப்பிற்கு உக்ரைனின் கடுமையான எதிர்ப்பு தொடர்கிறது. இதன் காரணத்தினால் அதிபர் விளாடிமிர் புதின் மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான அச்சுறுத்தல்களை விரைவில் விடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: