முறையான அனுமதி பெறப்படாது வவுனியாவில் அரச காணியில் வர்த்தக சங்க கட்டிடம் – உடன் நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு ஆளுநர் உத்தரவு!

Wednesday, July 26th, 2023

முறையான அனுமதி பெறப்படாது அரச காணியில் அமைக்கப்பட்ட வவுனியா வர்த்தக சங்க கட்டிடம் தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்குமாறு அரச அதிகாரிகளுக்கு வடக்கு மாகாண ஆளுனர் பீ.எஸ்.எம்.சாள்ஸ் உத்தரவிட்டுள்ளார்.

வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் வடமாகாண ஆளுனர் பீ.எஸ்.எம்.சாள்ஸ் மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான குலசிங்கம் திலீபன் ஆகியோரது இணைத் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது வவுனியா நகரின் அபிவிருத்தி தொடர்பாக நகர அபிவிருத்தி அதிகார சபையால் திட்ட முன்மொழிவுகள் சமர்பிக்கப்பட்டது.

குறிப்பாக நகரில் ஏற்க்கனவே சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டங்கள் தொடர்பாகவும், நகரில் உள்ள காணிகளை பாதுகாப்பது தொடர்பாகவும் எவ்வாறான நடவடிக்கையினை எடுப்பது என்று அபிவிருத்திகுழு தலைவரால் கோரப்பட்டதுடன், வவுனியா வர்த்தக சங்கத்தால் அமைக்கப்பட்ட புதிய கட்டடம் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதன்போது, நகரின் அபிவிருத்தி தொடர்பில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் திட்டத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் புதிய வர்த்தக சங்க கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த கட்டடம் அமைந்துள்ள காணி அரச காணியாக இருப்பதால் பிரதேச செயலாளர் ஏன் அதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை என்று வடக்கு ஆளுனரால் விளக்கம் கோரப்பட்டது.

இதற்கு பதில் அளித்த பிரதேச செயலாளர் நா.கமலதாசன், இது தொடர்பாக நகரசபைக்கு கடிதம் அனுப்பியதாகவும், அவர்கள் அதற்கான நடவடிக்கையினை எடுக்கவில்லை எனத் தெரிவித்தார்.

எனினும்,  காணி பிரதேச செயலாளரின் கீழ் இருப்பதால் நீங்கள் கட்டடம் அமைக்க முன்னரே அதற்கான நடவடிக்கையினை எடுத்திருக்க வேண்டும் என்று ஆளுனர் தெரிவித்திருந்தார். குறித்த விடயம் தொடர்பாக மாவட்ட குழுக்கூட்டத்தில் காரசாரமான விவாதம் இடம்பெற்றது.

இதன் போது, வவுனியா நகரில் இவ்வாறு பல கட்டடங்கள் அனுமதியற்று கட்டப்படுவதாகவும், அதற்கான நடவடிக்கையினை எடுக்க வேண்டிய அதிகாரிகள் அமைதியாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது. 

வவுனியா மாநகரசபை மற்றும் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோருக்கு எதிராக இதன்போது குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டதுடன், வடமாகாண ஆளுனரும் அவர்களது செயற்பாடு தொடர்பில் கண்டித்திருந்தார்.

அத்துடன், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கமும் புதிதாக கட்டடம் அமைத்துள்ள காணியும் அவர்களுக்கானது அல்ல எனவும், அதற்கும் அனுமதி பெறப்படவில்லை எனவும் பிரதேச செயளலாளர் சுட்டிக் காட்டியிருந்தார்.

இவ்வாறான அனுமதியற்ற கட்டடங்கள் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணித்த வடக்கு ஆளுனர், ஏற்கனவே அமைக்கப்படிருந்த கட்டடங்களின் பெறுமதிக்கமைய அவர்களிடமிருந்து குத்தகையினை அறவிட்டு குத்தகை அடிப்படையில் அதனை வழங்குவதற்கான நடவடிக்கையினை எடுக்குமாறும் அல்லது குறித்த காணிகளை மீள பெறுமாறும் தெரிவித்ததுடன், காணி விடயத்தில் அதிகாரிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: