மும்மொழி அமுலாக்கத்தை உறுதிசெய்வதற்கு கண்காணிப்புக் குழு நியமிக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா
Thursday, June 9th, 2016
மும்மொழிக் கொள்கையை அமுலாக்கும் செயற்பாடுகள் ஆக்கபூர்வமானதாக காணப்படவில்லையென சுட்டிக்காட்டிய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா மும்மொழி அமுலாக்கத்தை உறுதிசெய்வதற்கான கண்காணிப்புக் குழு நியமிக்கப்பட வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் செவ் வாய்க்கிழமை நிலையியற் கட்டளை 23 இன் கீழ் இரண்டில் தேசிய கலந்துரையாடல் சகவாழ்வு மற்றும் அரச கரும மொழி கள் அமைச்சர் மனோ கணேசனிடம் மும் மொழி அமுலாக்கல் மற்றும் வடக்கு, கிழக் கில் காணப்படும் மொழி ரீதியான பிரச்சி னைகள் தொடர்பாக விசேட கூற்றை முன்வைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
அவர் மேலும் கூறுகையில், தமிழ் மொழி யும் சிங்கள மொழியும் அரச கரும மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அரசியலமைப்பின் 13, 14 ஆம் சரத்துக்களில் மொழியுரிமை தொடர்புபட்டுள்ளதோடு தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி அடிப்படை உரிமைகளிலும் மொழி காணப்படுகின்றது
அவ்வாறான நிலையில் மும்மொழி அமுலாக்கம் தற்போதும் கிடப்பிலேயே காணப்படுகின்றது. குறிப்பாக வடக்கு, கிழக்கில் தற்போதும் சுற்றுநிருபங்கள், மத்திய அரசாங்கத்தின் திணைக்களத்தின் அறிவித்தல்கள் ஆகியன சிங்கள மொழியிலேயே வெளிவருகின்றன. அது மட்டுமின்றி பிரதேச செயலாளர்கள், திணைக்களங்கள், அரச நிறுவனங்களில் பொதுமக்கள் தமது ஆட்சியுரிமை மொழியில் எவ்விதமான செயற்பாடுகளையும் முன்னெடுக்க முடியாத நிலையில் இருக்கின்றனர்
அதுமட்டுமின்றி மொழி ரீதியான பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்தவண்ணமிருக்கின்றனர். வடக்கு, கிழக்கு பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழி மூலமான முறைப்பாடுகளை செய்ய முடியாத நிலை நீடித்துக் கொண்டிருக்கிறது
ஆட்சியுரிமை மொழியான தமிழ் மொழியை முழுமையாக அமுல்படுத்தாமை மொழியுரிமை மீறல் என்பதற்கு அப்பால் மனித உரிமை மீறலுமாகும். அவ்வாறான நிலையில் மும்மொழி அமுலாக்கத்தினை உறுதிசெய்து கொள்வதற்கு ஏற்ற வகையில் கண்காணிப்புக் குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென பரிந்துரை செய்கின்றனர்
அதேவேளை, நாடளாவிய ரீதியில் 72 பிரதேச செயலகங்கள் இருமொழி பிரதேச செயலகங்களாகக் காணப்படுகின்றன. எனினும் அங்கு மொழி பெயர்ப்பாளர்கள் முழுமையாக நியமிக்கப்படவில்லை
அதேபோன்று அரச நிறுவனங்கள், திணைக்களங்களிலும் மொழி பெயர்ப்பாளர்கள் பற்றாக்குறை காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில் தங்களுடைய அமைச்சானது மும்மொழி அமுலாக்கம் தொடர்பாக எடுத்துள்ள எஞ்சியுள்ள நடவடிக்கைகள் என்ன? குறிப்பாக கல்வி அமைச்சில் தமிழுக்கு தனியான பிரிவு காணப்படுகின்ற போதும் தொடர்ந்தும் சிங்கள மொழியிலான சுற்றுநிருபங்கள், அறிவித்தல்கள் வெளியிடப்படுவதற்கான காரணம் என்ன? வடக்கு, கிழக்கில் காணப்படும் தமிழ்மொழி பொலிஸாரின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய எடுக்கப் பட்ட நடவடிக்கை என்ன எனவும் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|