முன்னைய நிலைமை மீண்டும் ஏற்படக்கூடாது – புதிய அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் அறிவிக்கப்பட்டமை குறித்து பாதுகாப்பு செயலர் விளக்கம்!

Tuesday, September 27th, 2022

நாட்டில் ஸ்திரமான சூழ்நிலை உருவாகி வருகின்ற போதிலும், போராட்டங்களை நடத்தி மக்கள் துன்புறுத்தப்பட்டால் காவல்துறையினர் சட்டத்தை அமுல்படுத்துவர் என பாதுகாப்பு செயலாளர்  ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர், குழப்பமான சூழ்நிலைகளைக் கட்டுப்படுத்துவதற்கு காவல்துறையினருக்கு உதவுவதற்கு பாதுகாப்புப் படைகள் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்..

அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் குறித்து விளக்கமளித்த பாதுகாப்பு செயலாளர், அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் இலங்கையில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றல்ல என்றார்.

“நீண்ட காலமாக நிலவிவரும் சில சூழ்நிலைகளைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட விடயங்கள் இவை. கடந்த காலங்களில் ஜனாதிபதி செயலகம் சுற்றி வளைக்கப்பட்டது.

அரசாங்க அதிகாரிகள் அங்கு தமது கடமைகளைச் செய்யமுடியாது போனது” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

“இதுபோன்ற முக்கிய முடிவெடுக்கும் இடங்கள் தடைபட்டால், அத்தகைய இடங்களை நாம் பாதுகாக்க வேண்டும். முன்னைய நிலைமை மீண்டும் ஏற்படக்கூடாது” என பாதுகாப்பு செயலாளர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: