முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவச பயன்பாட்டுக்கு புதிய சட்டம்!

Tuesday, April 30th, 2019

நாட்டின் தற்போதைய நிலைமைக்கு அமைய புல்பேஸ் எனப்படும் முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவச பயன்பாடு சில கட்டுப்பாடுகளுக்கு உட்படும் என போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சினால் விடுக்கப்பட்ட விஷேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவச பயன்பாடு தொடர்பில் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடை மற்றும் முகத்திரை தடை தொடர்பான விஷேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று இரவு வெளியானது.

முகத்தை முழுமையாக மறைக்கும் என்பதற்கான அர்த்தம், அவ்வாறான ஆடைகளை அணிந்து செல்லக் கூடாத பொது இடங்கள் உள்ளிட்ட சகல தகவல்களும் அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் பயங்கரவாதம் என்பதற்கான அர்த்தம் தொடர்பிலும் அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, அடிப்படைவாத, மத ரீதியான பிரசாரங்களை ஊக்குவித்தல் மற்றும் வரவேற்றல் பயங்கரவாத செயற்பாடாக கருதப்படும் என அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: