மிளகாய்த்தூளிலும் விஷம்? – சுகாதார பாதுகாப்பு நிலைமைகள் குறித்து வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்துமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்து!

Monday, March 29th, 2021

விஷம் கலந்த மிளகாய்த்தூள் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் உணவு இறக்குமதி செய்யும் போது, சுகாதார பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆராயும் வேலைத்திட்டமொன்றை உடனடியாக அறிமுகப்படுத்துமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பில் அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமந்த ஆனந்த மேலும் கூறுகையில் –

இவ்வாறான வேலைத்திட்டமொன்று இல்லாமை காரணமாகவே, உடம்புக்கு ஒவ்வாத பல உணவு பொருட்களை மக்கள் பயன்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, உணவு இறக்குமதியின் போது, பால் மா மற்றும் காய்ந்த மிளகாய் இறக்குமதிகளின் போதும், இவ்வாறான சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தன.

கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கைக்கு 17 நிறுவனங்கள் எஃப்லடோக்சின் பதார்த்தம் அடங்கிய காய்ந்த மிளகாய் 200 மெற்றிக் தொண்ணுக்கும் அதிகமான தொகை இறக்குமதி செய்யப்பட்டு, சந்தைக்கு விடுவிக்கப்பட்டிருந்தது.

எனினும் இரசாயன ஆய்வு அறிக்கை கிடைக்கப் பெறுவதற்கு முன்னர், காய்ந்த மிளகாய் விடுவிக்கப்பட்டமை குறித்து, இலங்கை சுங்கத் திணைக்களத்தின் மீது உள்ளக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையிலேயே, தற்போது நாட்டில் தேங்காய் எண்ணெய் இறக்குமதியிலும் இதேபோன்றதொரு பிரச்சினை எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: