மின்சாரம் மற்றும் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!
Tuesday, November 22nd, 2022இலங்கை தீவுகள் அபிவிருத்தி அதிகார சபை என்ற புதிய நிறுவனத்தை ஸ்தாபிப்பது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நேற்று (21) நடைபெறவுள்ள அமைச்சரவையில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள தீவுக்கூட்டத்தை அபிவிருத்தி செய்து நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் திறம்பட பயன்படுத்தும் நோக்கில் இந்த புதிய அதிகாரசபை நிறுவப்படவுள்ளது.
நம் நாட்டைச் சுற்றி 60க்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. இந்த தீவுக்கூட்டத்தை அபிவிருத்தி செய்து சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அதிகரிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை திறம்பட பயன்படுத்த முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது நமது நாடு பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. எனவே, நாடு முழுவதும் உள்ள இந்த தீவுகளை முறையாக அபிவிருத்தி செய்வதன் மூலம் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.
உலகின் பல நாடுகளில் அமைந்துள்ள தீவுகளின் பொருளாதார ஆற்றல்கள் மதிப்பிடப்பட்ட போதிலும், இலங்கையைச் சூழவுள்ள சிறிய தீவுகளின் பொருளாதார ஆற்றல்கள் இதுவரை சரியாக மதிப்பீடு செய்யப்படவில்லை என அமைச்சர் உரிய அமைச்சரவை பத்திரத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நம் நாட்டைச் சுற்றியுள்ள பெரும்பாலான தீவுகள் பயன்பாட்டில் இல்லை. மேலும் சில தீவுகளில் மட்டும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் அங்கு குடியிருந்து மீன்பிடியில் ஈடுபடுவார்கள்.
எனவே இந்த தீவுகளின் புவியியல் இருப்பிடம் மற்றும் தற்போதுள்ள வளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் உள்ளூர் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை வழங்குவதற்கான வாய்ப்பு உள்ளது.
மேலும், இந்த சிறிய தீவுகள் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. இத்தகைய தீவுகள் சுற்றுச்சூழலின் நிலைத்தன்மையைப் பேணுவதன் மூலம் தேவையான உள்கட்டமைப்பை வழங்குவதன் மூலமும் சுற்றுலாத் தொழிலை மேம்படுத்த பயன்படுத்தப்படலாம். இதன்படி, பொழுதுபோக்கு, சுகாதார நலன், ஆய்வு, கல்வி, சுற்றுச்சூழல், ஆன்மீகம்/கலாச்சார நோக்கங்களுடன் சுற்றுலாத் தொழில்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் இந்தத் தீவுகளை சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பிரபலமாக்க முடியும் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறினார்.
கூடுதலாக இந்தத் தீவுகளில் வணிக ரீதியாக பெறுமதியுடைய கனிம வளங்கள் உள்ளது. அந்த கனிம வளங்களைப் பயன்படுத்தி மதிப்புக் கூட்டுத் தொழில்களை மேற்கொள்வதன் மூலம் பெருமளவு வருமானம் ஈட்டக்கூடிய வாய்ப்பும் உள்ளது
மேலும், இந்த தீவுகளில் இயற்கையான இடங்களுக்கு ஏற்ப செயல்படுத்தக்கூடிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்கள், காற்றாலை மின் திட்டங்கள், சூரிய மின் உற்பத்தி பூங்காக்கள், கடல் அலைகளிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்தல், புவி வெப்ப மின் நிலையங்கள் போன்றவற்றை கண்டறிந்து நிலைபெறுக்கு வலு அதிகாரசபையின் உதவியோடு அதற்குரிய பொருத்தமான முதலீட்டாளர்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
இது தவிர, தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் அமைக்கப்பட வேண்டிய அதிக இரைச்சல், அதிக வெப்ப உமிழ்வு மற்றும் கதிரியக்க உமிழ்வு கொண்ட தொழிற்சாலைகளையும் இந்த தீவுகளில் அமைக்கலாம். மேலும், தகுந்த விவசாயம் மற்றும் மீன்பிடி போன்ற மதிப்பு கூட்டப்பட்ட தொழில்களால் தீவுகளுக்கு நிறைய வருமானத்தை ஈட்ட முடியும்.
தீவுகளுக்கு இடையேயான கடல் போக்குவரத்திற்கு சூரிய மற்றும் காற்றில் இயங்கும் படகுகள் மற்றும் கப்பல்கள் பயன்படுத்தப்படுவது எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக அமையும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இது தவிர கடல் நீர் சுத்திகரிப்பு போன்ற திட்டங்களினூடாகவும் பெருமளவு வருமானத்தை ஈட்ட முடியும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு அபிவிருத்தி செய்யப்படும் தீவுகளின் பாதுகாப்பு கடற்படை மற்றும் கடலோர காவல் துறை மற்றும் போலீஸ் பாதுகாப்புப் பிரிவு ஆகியவற்றிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|