மின்சாரக் கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு மின்சார விநியோகத்தை நிறுத்தும் நடைமுறை அனைவருக்கும் பொருந்தும் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Tuesday, September 13th, 2022

மின்சாரக் கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு மின்சார விநியோகத்தை நிறுத்தும் நடைமுறை அனைவருக்கும் பொருந்தும்  என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அவரது தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளார்.

மின்சார விநியோகத்தை நிறுத்தும் போது அதில் விகாரைகள் அல்லது மதத் ஸ்தலங்களுக்கு என தனிச் சட்டம் அல்லது சலுகைகள் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பல மத ஸ்தலங்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள மின்சார கட்டணத்தை செலுத்த முடியாது என ஓமல்பே சோபித தேரர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

கட்டணத்தை செலுத்த கூடிய திறன் உள்ள போதிலும் அதிகரிக்கப்பட்ட மின்கட்டணத்தை செலுத்தமாட்டேன். அரசாங்கத்தின் மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு எதிராக மின்கட்டணத்தை செலுத்தாத தேசிய இயக்கமொன்றை ஆரம்பிக்கவுள்ளேன் எனவும் சோபித தேரர் மேலும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மின்சாரம் பயன்படுத்தினால் கட்டணத்தை செலுத்துவது கட்டாயம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் தொடர்ச்சியாக கட்டணம் செலுத்தாதவர்களுக்கு மின்சார விநியோகம் நிறுத்தப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

சோபித தேரர் விடுத்துள்ள கருத்துக்கள் முழுமையாக அரசியல் சார்ந்தவை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: