மின்சக்தி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

Tuesday, February 18th, 2020

நாட்டில் நிலவும் வரட்சியுடனான காலநிலை காரணமாக நாளாந்த நீர்மின் உற்பத்தி வீழ்ச்சியடைந்து வருவதாக, மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நாளாந்தம் 5 வீத நீர்மின் உற்பத்தியே முன்னெடுக்கப்படுவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, நீர்மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 69 வீதமாகக் காணப்படுவதாக, அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 53 வீதமாகவும், மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 63 வீதமாகவும், கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 54 வீதமாகவும், விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 79 வீதமாகவும் காணப்படுவதாகவும், சுலக்ஷன ஜயவர்தன  குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் வரட்சியான வானிலை தொடர்வதால் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மின்சக்தி அமைச்சு, பாவனையாளர்களைக் கேட்டுள்ளது.

சில காலங்களில்  மின்சாரத் தேவையில் மூன்றில் இரண்டு பங்கு வரை நீர்மின் உற்பத்தியூடாக உற்பத்தி செய்யப்படும். இது வரட்சியான காலநிலையுடன் வீழ்ச்சியடைந்துள்ளது.

அத்தோடு 2015 இன் பின்னர் புதிதாக எந்த ஒரு மின் உற்பத்தித் திட்டமும் ஆரம்பிக்கப்படாத நிலையில், மின்சார நெருக்கடி ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் மின்சக்தி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில், தனியார் துறையினரிடமிருந்து 200 மெகா வோர்ட் மின்சாரம் கொள்வனவு செய்யவும் அமைச்சு முடிவு செய்துள்ளது.

மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பாவனையாளர்களிடம் கோரப்பட்டுள்ள நிலையில், தேவையற்ற மின்குமிழ்களையும் மின்விசிறிகளையும் அணைத்து வைக்குமாறும் வேண்டப்பட்டுள்ளது.

Related posts: