மார்ச் 31 முதல் சில பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் வகைகள் பாவனைக்கு தடை -சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவிப்பு!

Tuesday, March 2nd, 2021

எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதிமுதல் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் வகைகள் சிலவற்றின் பாவனையை தடை செய்ய சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் ஒருமுறை மாத்திரம் பயன்படுத்திவிட்டு அகற்றப்படுகின்ற பொலித்தீன், பிளாஸ்டிக் போத்தல், மைக்ரோ இருபதுக்கும் குறைவான பொலித்தீன், பெட் போத்தல் (PET Bojttle)  ,செம்போ பக்கெட், காட்டன் பட் மற்றும் காற்று நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் விளையாட்டுப் பொருட்கள் என்பன இதனுள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் பொருட்கள் அதிகமானவை சூழலுடன் சேர்வதியால் இந்நாட்டில் அதிகமாக சூழல் மாசடைவு ஏற்படுவதுடன், குடிநீர் மற்றும் நீர் மாசடைவதாகவும் தெரியவந்துள்ளது.

எனவே இவ்வாறான பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் உற்பத்திகள் சிலவற்றை மார்ச் 31 முதல் இலங்கையில் உற்பத்தி செய்ய மற்றும் விநியோகிக்க தடை செய்யப்பட்டுள்ளதுடன் அதற்கு பதிலாக சூழலுக்கு உகந்த பொருட்களை அறிமுகப்படுத்து தொடர்பாக சுற்றாடல் அமைச்சு பல்வேறு பிரிவினர்களுடன் கலந்துரையாடியுள்ளது.

இதன்படி கடந்த வாரம் சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் பல தனியார் வியாபார நிறுவனங்களுடன் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இதில் இலங்கை பல முதல்தர ஹோட்டல்களில் பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் பாவனைக்கு பதிலான மாற்று பொருட்கள் பயன்படுத்தப்படுவது குறித்து  வியாபாரிகள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டினார். மேலும் அவர்கள் பயன்படுத்துகின்ற சூழலுக்கு பாதிப்பில்லாத பொருட்கள் சிலவற்றை அமைச்சரிடம் சமர்ப்பித்திருந்தனர்.

இந்நிலையில் மார்ச் 31 ஆம் திகதியிலிருந்து தடை செய்யப்படுகின்ற பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்களுடன் இந்த வருட இறுதிக்குள் மேலும் 350 உற்பத்திப் பொருட்கள் பயன்படுத்துவதை தடை செய்வதற்கு சுற்றாடல் அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர் மஹிந்த அமரவீர முடிந்தவரை சூழலுக்கு பாதிப்பில்லாத பொருட்களை பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வியாபாரிகளிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: