மாணவர்களுக்கு போதுமான பேருந்து இன்றுமுதல் சேவையில் – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!

Monday, January 10th, 2022

இன்றுமுதல் அனைத்து தர மாணவர்களையும் பாடசாலைக்குத் திரும்ப அழைக்கும் தீர்மானத்துக்கு அமைய, மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக போதிய எண்ணிக்கையிலான ‘சிசு சரிய’ பேருந்துகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

குறிப்பிட்ட பாடசாலை அல்லது பிரதேசத்துக்கு மேலதிக பேருந்துகள் தேவைப்படுமாயின் அருகிலுள்ள டிப்போவின் அத்தியட்சகருடன் தொடர்பு கொண்டு அதனை ஏற்பாடு செய்ய முடியும் எனவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சரான திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது தொடர்பில் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவிக்கப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்..

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகள் அல்லது தனியார் பேருந்துகள் தேவைப்படுமாயின் வழங்க முடியும் என்றும் போக்குவரத்து அமைச்சு இதற்கான நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக பேருந்து கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகாரளித்திருப்பது தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவியபோது, நடத்துனர்களால் அதிக கட்டணத்தை வசூலிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரி 4 மற்றும் 5 ஆம் திகதிகளில், திருத்தப்பட்ட பேருந்து கட்டணங்கள் தொடர்பில் அரசாங்கம் பத்திரிகைகளில் அறிவிப்புகளை வெளியிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அனைத்து பேருந்து வகைகளுக்கும் திருத்தப்பட்ட பேருந்து கட்டணங்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத் தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன.

பேருந்து கட்டணம் 17 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ள தாகவும், குறைந்தபட்ச கட்டணம் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts:

தனிமைப்படுத்தப்பட்ட விதிகள் மீறப்படுவதை கண்காணிக்க சிவில் உடையில் பொலிஸார் எந்த நேரத்திலும் நிறுவனங்...
பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நாட்டை மீண்டும் திறக்க வேண்டிய நேரம் இது - விளையாட்டு மற்றும் இளைஞர் விவக...
இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் உள்ள வரலாற்று ரீதியிலான நல்லுறவை கவனத்தில் கொள்ள வேண்டும் – அமைச்சர...