மற்றொரு கொரோனா அலை அச்சுறுத்தல் இல்லை – வீடுகளுக்கு சென்று செயலூக்கி தடுப்பூசி செலுத்தவும் நடவடிக்கை – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவிப்பு!

Saturday, February 5th, 2022

மீண்டும் ஒரு கொரோனா தொற்று அலை ஏற்படக்கூடிய அளவுக்கு கொரோனா தொற்றாளர்கள் மற்றும் மரணங்கள் பதிவாகவில்லை என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றி கொரோனா தொற்று அலை  ஏற்படாது பாதுகாத்துக் கொள்வது மிகவும் முக்கியமானது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்;

இதனிடையே வீடுகளிலிருந்து வெளியேற முடியாதவர்களுக்கு, வீடுகளுக்கே சென்று செயலூக்கி தடுப்பூசியை செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் இந்த நடமாடும் வேலைத்திட்டத்தில், இராணுவ மற்றும் சுகாதாரத்துறை பிரதிநிதிகளின் குழுக்கள் ஈடுபடுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் மேலும் ஆயிரத்து 243 பேருக்கு நேற்று கொவிட்-19 தொற்று உறுதியானது.

இதன்படி, கொவிட்-19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 15 ஆயிரத்து 902 ஆக உயர்வடைந்துள்ளதென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், நேற்றுமுன்தினம் கொவிட் தொற்றால் 29 பேர் உயிரிழந்தனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 544 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: