மருந்து தட்டுப்பாட்டிற்கு 6 வாரங்களுக்குள் தீர்வு – சுகாதார அமைச்சர் கெஹெலிய உறுதி!

Wednesday, June 15th, 2022

நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டை எதிர்வரும் 6 வாரங்களுக்குள் முழுமையாக நிவர்த்தி செய்ய முடியும் என சுகாதார அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

மருந்துகளை கொண்டுவருவதற்கு தேவையான நிதி கிடைத்துள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசியமான 14 மருந்து வகைகள் தேவையானளவு கையிருப்பிலுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

எவ்வாறாயினும், மேலும் 186 மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அவற்றை விரைவில் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

அரச வைத்தியசாலைகளுக்கும், தற்போது தனியார் மருந்தகங்களில் இருந்து மருந்துகளை கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் பொருளாளர் மஞ்சுள ஜயவர்த்தன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அவசர விபத்து ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவருக்கு சாதாரண சேலைனை வழங்குவதற்கு வெளித் தரப்பினரை நாடவேண்டிய நிலை உள்ளது.

நகர மற்றும் கிராமம் என்ற வித்தியாசமின்றி, அனைத்து வைத்தியசாலைகளிலும் இந்த நிலை உள்ளது.

பெருமளவான கிராமப்புற வைத்தியசாலைகளில் சாதாரண சேலைன்களின் கையிருப்பு முடிவடைந்துள்ளதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் பொருளாளர் மஞ்சுள ஜயவர்த்தன தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: