மனித தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, பூமியின் ஆரோக்கியத்தை பேணுவதற்கும் அனைவரும் முன்னுரிமை அளிக்க வேண்டும் – உலகத் தலைவர்களிடம் ஜனாதிபதி வலியுறுத்து!

Saturday, September 25th, 2021

பூமியின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த வேண்டுமாயின், பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல் மற்றும் நிலையான சக்திவலு தீர்வுகளை ஊக்குவிப்பது அவசியம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் சக்தி வலு தொடர்பான அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மனித தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, இந்த பூமியின் ஆரோக்கியத்தை பேணுவதற்கு, உலகில் அனைத்து மக்களும் முன்னுரிமை அளித்து செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் மனிதர்களால் மேற்கொள்ளப்படும் சுற்றுச்சூழல் அழிவுகள் காரணமாக ஏற்படும் காலநிலை மாற்றங்களால் பூமிக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை, தொடர்ந்தும் புறக்கணிக்கலாகாது எனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி எதிர்வரும் சில தசாப்தங்களுக்குள் இவ்வாறான அச்சுறுத்தல்களை குறைத்து கொள்ள வேண்டுமாயின், முழு உலகமும் சுத்தமான சக்தி வலுக்களை நோக்கிச் செல்ல வேண்டியது அத்தியாவசியமாகிறது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேநேரம் மிகச்சிறந்த நிலையான சக்திவலு உற்பத்தி மற்றும் பயன்பாட்டை நோக்கிப் பயணிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு, அதற்கான இயலுமையுள்ள அனைத்து நாடுகளிடமும் தாம் கோருவதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை 2030ஆம் ஆண்டுக்குள், நாட்டின் சக்திவலுத் தேவையின் 70 சதவீதத்தை, மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவலுக்கள் ஊடாகப் பெற்றுக்கொள்வதே இலக்காக உள்ளது. அத்துடன், படிம எரிபொருட்களிலிருந்து படிப்படியாக விலகி, காபனேற்றத்தைக் குறைத்தல் மற்றும் 2050ஆம் ஆண்டுக்குள் காபன் மாசற்ற நாடாக இலங்கையை உருவாக்குவதற்கான திட்டமிடல்களுடன் செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்துடன் புதிய நிலக்கரி மின்னுற்பத்தி நிலையங்களை உருவாக்காதிருக்கும் நிலைப்பாட்டில் இலங்கை உறுதியாக இருக்கின்றது என்றும் காலநிலை மாற்றங்கள் தொடர்பான ஐ.நா மாநாட்டுக்குப்  பெற்றுக்கொடுக்கப்படும் பங்களிப்பு அதற்குப் பிரதிபலிப்பாக இருக்கின்றது என்றும் எடுத்துரைத்த ஜனாதிபதி, இலங்கையானது, புதிய நிலக்கரி வலுவற்ற சக்திவலுக் கூட்டமைப்பின் இணைத் தலைமையாக இருக்கின்றமை குறித்து மகிழ்ச்சியும் தெரிவித்தார்.

இந்நிலையில் நாடு முழுவதிலும், 7 ஆயிரம் சூரியசக்தி மூலமான மின்னுற்பத்தி வேலைத்திட்டங்களை அமுல்படுத்தத் தயாராக இருப்பதாகவும் அவற்றில் முதலீடு செய்வதற்காக, இலங்கைத் தொழிற்றுறையினர், சிறு வியாபாரிகள் மற்றும் சமூக நிறுவனங்களை ஊக்குவித்து வருவதாகவும், நாட்டுக்குள் மிகப் பெரிய காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தை, அண்மையில் ஆரம்பித்து வைத்ததாகவும், ஜனாதிபதி தெரவித்தார்.

அதற்கமைய, எதிர்வரும் சில தசாப்தங்களுக்குள், மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவலுக்கள், விசேடமாக சூரியசக்தி, காற்றாலை மற்றும் உயிரி எரிபொருள் போன்ற பாரியளவிலான முதலீடுகளை இலங்கை வரவேற்கிறது என்றும், ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இதேவேளை அனைவராலும் கொள்வனவு செய்யக் கூடியதும் நம்பிக்கை மிகுந்ததுமான நிலையான சக்தி வலுவைப் பெற்றுக் கொள்வதற்குரிய வாய்ப்பை உறுதிப்படுத்தல்’ எனும் தொனிப்பொருளின் கீழ், குறித்த மாநாடு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: