மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து இந்தியாவும் சர்வதேச சமூகமும் கருத்திற்கொள்ளவேண்டும் – அமைச்சர் ஜிஎல் பீரீஸ் தெரிவிப்பு!

Sunday, February 13th, 2022

இருதரப்பு உறவுகளை மேலும் ஏற்படுத்துவதற்கான முயற்சிகளின் மத்தியில் இந்தியாவின் மூலோபாயரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த அயல்நாடு இந்தியாவின் பாதுகாப்பிற்கும் நலனிற்கும் எதிராக எந்த நாடும் தனது நாட்டை பயன்படுத்துவதற்கு அனுமதிக்காது என வெளிவிவகார அமைச்சர் ஜிஎல்பீரிஸ் தெரிவித்துள்ளார்.

டைம்ஸ் ஒவ் இந்தியாவிற்கு வழங்கிய செவ்வியில் அவர் மேலும் கூறுகையில் – இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி காரணமாக அதன் சொத்துக்களை சீனாவிற்கோ அல்லது வேறு நாட்டிற்கோ வழங்கும் ஆபத்து இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் புதிய பட்டுப்பாதை திட்டத்தின் மூலம் இலங்கை பயனடைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா இலங்கையில் குறிப்பாக் சீனாவின் நடவடிக்கைகள் குறித்து கரிசனை அடைந்துள்ளது – குறிப்பாக சீனா வடபகுதி மீனவர்களை நெருங்குவது குறித்து கரிசனை கொண்டுள்ளது.

எனினும் இந்த அச்சங்கள் தேவையற்றவை என தெரிவித்துள்ள அமைச்சர் ஜிஎல் பீரிஸ் திருகோணமலை எண்ணெய் குத அபிவிருத்தி தொடர்பான உடன்படிக்கைகள் மற்றும் அடானி குழுமம் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை பெற்றுக்கொண்டுள்ளமை காரணமாக இரு நாட்டு உறவுகளும் மூலோபாய உறவுகள் என்ற அடிப்படையில் உயர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தவறான அனுமானங்களின் அடிப்படையில் சீனா குறித்த கேள்விகள் எழுகின்றன என தெரிவித்துள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் சீனாவின் திட்டங்கள் காணப்படுகின்றது என்றால் இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் திட்டங்களும் காணப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.

புதிய பட்டுப்பாதை திட்டத்தினால் இலங்கை பயனடைந்துள்ளது. ஆனால் அதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாதவண்ணம் அதனை கையாண்டுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடன்பொறி என்பது உருவாக்கப்பட்ட ஒரு புனைகதை. சீனாவிடமிருந்தோ அல்லது வேறு எந்த நாட்டிடமிருந்தோ நாங்கள் கடன்களை பெறும்போது திருப்பி செலுத்துவது குறித்த சிறந்த யோசகையுடனேயே அதனை பெறுகின்றோம் என தெரிவித்துள்ளார்.

2015 இல் அரசாங்கம் மாறியவேளை நாங்கள் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கான மூன்றில் ஒரு வீத கடனை செலுத்தியிருந்தோம் என தெரிவித்துள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் இலங்கை கடனிலிருந்து மீளமுடியாத- அதன் சொத்துக்கள் இன்னொரு நாட்டிற்கு செல்லக்கூடிய ஆபத்து ஒருபோதும் காணப்பட்டதில்லை என தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறை வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களின் வருமானம் போன்றவற்றில் மீள முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் இலங்கையின் பொருளாதார நிலைமையில் முன்னேற்றம் ஏற்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஒவ்வொரு துறையிலும் குறிப்பிடத்தக்க அளவிற்கு இலங்கையின் காலடித்தடம் உள்ளது, ஏனைய நாடுகள் இந்தியாவை முந்திவிட்டன மறைத்துவிட்டன என எப்படி தெரிவிக்க முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எந்த நாட்டின் பாதுகாப்பு நன்மைக்கு எதிராகவும் எங்கள் நாட்டை பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் என குறிப்பிட்டுள்ள அவர் குறிப்பாக இந்தியாவிற்கு நலன்களிற்கு எதிராக எங்கள் நாட்டை பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.

சீனா இலங்கையின் வடபகுதியில் காலடி எடுத்துவைக்க முயல்வது குறித்து கருத்து வெளியிட்;டுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் சீனாவின் தூதுவரின் வடபகுதி விஜயம் சிவில் சமூகத்தினரை சந்தித்தது மீனவர்களை சந்தித்தது போன்றவற்றை இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கையாக கருதக்கூடாது என தெரிவித்துள்ளார்.

இதேநேரம் மனித உரிமை விவகாரங்களிற்கு தீர்வு காண்பதில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து இந்தியாவும் சர்வதேச சமூகமும் கருத்தில்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் ஜிஎல் பீரிஸ் தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது.

Related posts: