மதிநுட்பமும் ஆத்ம பலமும் உள்ளவர்களிடம் அரசியல் பலம் இருந்தால் தமிழ் மக்களை யாரும் ஏமாற்ற முடியாது – வட்டுக்கோட்டையில் ஈ.பி.டி.பி. விந்தன்!
Monday, March 27th, 2017தமிழ் பேசும் மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்கான மதிநுட்ப சிந்தனையும் ஆத்ம பலமும் உள்ளவர்களிடம் போதிய அரசியல் பலத்தை மக்கள் வழங்கிளால் தமிழ் மக்களை யாரும் ஏமாற்ற முடியாது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம்(26) வட்டுக்கோட்டை தொகுதியில் கட்சியின் பிரதேச நிர்வாக செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
அரசியல் பலத்தை ஆற்றல்மிக்க சக்திகளின் கரங்களில் ஒப்படைப்பதன் மூலமே தமிழ் மக்கள் உரிமை பெற்று நிமர்ந்து நிற்க முடியும். ஆனாலும் ஆற்றலும் அக்கறையும் இல்லாதவர்களிடம் அரசியல் பலத்தை வழங்கியதால் தமிழ் மக்கள் இன்று ஏமாற்றமடைந்துள்ளனர்.
மாய மந்திரங்களை ஓதி உச்சந்தலையில் நச்சு மருந்து தடவி மக்களின் ஆணையைப் பெற்றவர்கள் தமது சொந்தச் சலுகைகளுக்காக சோரம்போய்விட்டார்கள்.
இதோ வருகிறது அதோ வருகிறது அரசியல் தீர்வு என்று விண்ணாணம் காட்டுபவர்கள் அரசாங்கம் எடுக்கும் கால அவகாசங்களுக்கு ஒப்புதல் வழங்கிவருகின்றார்கள்.
கலப்பு நீதிமன்ற விசாரணை என்று கடந்தவருடம் எடுத்த ஜெனீவா தீர்மானம் இன்று வழங்கப்படும் கால அவகாசத்தால் அறவே எந்த விசாரணைகளும் அற்ற நிலையே உருவாகப் போகின்றது.
சர்வதேச யுத்தக் குற்ற விசாரணை என்று ஐ.நாவை வைத்து அரசியல் சித்து விளையாட்டு நடத்தும் சுத்துமாத்துகள் இனியும் தேவையில்லை. அரசுடன் பேசி உரிமைகளை பெறுவதற்கான பொறிமுறையைக் கற்றுக்கொள்ளுங்கள்.
அரசாங்கம் எடுத்திருக்கும் கால அவகாசத்தை தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் சந்தர்ப்பமாக பயன்படுத்த முன்வரவேண்டும்.
தமிழ் மக்கள் சந்தித்த வதைகளுக்கும் வலிகளுக்கும் அழிவுகளுக்கும் மாற்றீடாக எமக்குத் தேவை நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றுமட்டுமே. இனியொரு வன்முறை. இனியொரு அழிவு நிகழாதிருப்பதற்கான அரசியல் மாற்றம் ஒன்றே எமக்குத் தேவை.
அரசியல் தீர்வற்ற அவலநிலை இனியும் தொடர்வதாயின் அதற்கு பொறுப்புக் கூறவேண்டியவர்கள் தமக்கு ஆணை வழங்குங்கள் அனைத்தையும் சாதிப்போம் என வாக்குறுதி வழங்கிய சக தமிழ் கட்சித் தலைமைகளே ஆகும்.
ஆனாலும் அவர்கள் அடுத்த தேர்தலின்போது வந்துநின்று ஏன் அரசியல் தீர்வு கிடைக்கவில்லை என்பதற்கு போலியான நியாயங்களையே போதிக்க முற்படுவார்கள். இது அவர்களின் எழுபது ஆண்டுகால ஏமாற்று வித்தை.
ஆகவே இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடிந்த ஆற்றலும் அக்கறையும் மிக்க எமக்கு அரசியல் பலத்தை வழங்குவதன் மூலமே எமது மண்ணில் மாற்றங்கள் நிகழும். எமது மதிநுட்ப சிந்தனையும் தமிழ் மக்களின் உணர்வுகளை உள்வாங்கிய எமது ஆத்ம பலமும் எமது மண்ணில் புதிய வரலாற்றை நிச்சயம் படைத்துத்தரும் என மேலும் அவர் தெரிவித்துள்ளர்.
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வலிகாமம் மேற்கு பிரதேச நிர்வாக செயலாளர் செல்வக்குமாரது ஒருங்கிணைப்பில் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் யாழ் மாவட்ட அலுவலக நிர்வாக செயலாளர் வசந்தன், ஆகியோர்கலந்து கொண்டனர்.
Related posts:
|
|