மண்டைதீவு காணி சுவீகரிப்புவிவகாரம்: மக்கள் திரண்டு தடுத்து நிறுத்தம்!

Thursday, April 11th, 2019

மண்டைதீவில் கடற்படையினர் நிரந்தர முகாம் அமைப்பதற்காக  பொது மக்களுக்குச் சொந்தமான 18 ஏக்கர் காணியை சுவீகரிப்பதற்காக மேற்கொள்ளப்படவிருந்த நில அளவை நடவடிக்கைகள் காணி உரிமையாளர்கள் மற்றும் பொது மக்களின் எதிர்ப்பு போராட்டத்தால் நிறுத்தப்பட்டுள்ளது.

மண்டைதீவு கிழக்கு அம்மன் கோவில் முன்பாக இன்று காலை 9 மணியளவில் குறித்த போராட்டம் நடைபெற்றது.

வேலணை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மண்டைதீவு கிழக்கு பகுதியில் நிலை கொண்டுள்ள கடற்படையினர் அப்பகுதியில் உள்ள 11 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கர் காணியில் முகாமிட்டுள்ளனர். 

குறித்த படைமுகாம் அமைந்துள்ள காணியை நிரந்தரமாக சுவீகரித்து படை முகாமினை விஸ்தரிப்புச் செய்வதற்கான நடவடிக்கைகளை கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர்.

இந்நடவடிக்கையில் முதற்கட்டமாக குறித்த காணியை சட்ட ரீதியில் சுவீகரிப்பதற்கான முன்னெடுப்புக்களை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த காணிகளை சுவீகரிக்க போவதாகவும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் நில அளவை திணைக்களத்தினால் காணி உரிமையாளர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி இன்று வியாழக்கிழமை குறித்த காணிகள் நில அளவை செய்யப்படவுள்ளதாகவும் அவ்வறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

காணி சுவீகரிப்புக்கான நில அளவை நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்த காணி உரிமையாளர்கள், அப்பகுதி மக்கள் மற்றும் பொது அமைப்புக்களுடன் இணைந்து நில அளவையை தடுத்து நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தினை அடுத்து கணி சுவீகரிப்புக்காக நில அளவை செய்யவந்த நில அளவை திணைக்களத்தினர் நில அளவை செய்யாமல் திரும்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: