மக்கள் சேவையில் மூழ்கியுள்ளார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாகச் செயலாளர் தவநாதன் தெரிவிப்பு!
Thursday, November 22nd, 2018எதைப்பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் மக்கள் சேவையில் மூழ்கியுள்ளார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாகச் செயலாளரும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான வை.தவநாதன் அவர்கள் தெரிவித்தார்.
இன்று (22.11.2018) கிளிநொச்சி வட்டக்கச்சியிலுள்ள பாரதி சனசமூக நிலையத்திற்கு தனது நிதியொதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட ரூபா 50000/= (ஐம்பதாயிரம்) பெறுமதியான கதிரைகளை வழங்கி வைத்து சுற்றாடலிலுள்ள மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அம்மக்களின் பிரதான பாவனையிலுள்ள கட்சன் வீதியையும் அதனை இணைக்கும் வீதிகளையும் புனரமைப்பு செய்ய வேண்டும், வீடுகள் இல்லாதோருக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட வேண்டும், யுத்தத்தால் பாதிக்கப்பட்டு சொத்துக்களை இழந்தோருக்கான இழப்பீடுகள் மற்றும் வாழ்வாதாரங்கள் வழங்கப்பட வேண்டும், சமூகத்தில் பல பிரச்சனைகளை உருவாக்கும் சட்டவிரோத மது உற்பத்தி, விற்பனை, பாவனை நிறுத்தப்பட வேண்டும். போன்ற பல கோரிக்கைகள் பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட போது கருத்து தெரிவித்த தவநாதன் அவர்கள்
தமிழ் மக்களின் பெருமளவான வாக்குகளை அபகரித்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கடந்த மூன்றரை வருடங்களாக இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான தடைகளை ஏற்படுத்தினர் என்றும் இதனை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நான் கூறவில்லை, ஏற்கனவே முன்னாள் அமைச்சர்களான சுவாமிநாதன் அவர்களும் மனோ கணேசன் அவர்களும் கிளிநொச்சியில் நடந்த பொது நிகழ்வுகளிலேயே பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தனர் என்றும் மேற்கண்ட பிரச்சனைகள் யாவற்றையும் தீர்ப்பதற்கான ஆரம்பச் செயற்றிட்டங்கள் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, புனரமைப்பு, வடக்கின் அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகாரங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாஅவர்களால் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாகவும் அடுத்த மாத ஆரம்பத்தில் அவை செயல் வடிவம் பெறும் என்றும் ஆணித்தரமாக தெரிவித்தார்.
பாரதி சனசமூக நிலைய தலைவர் த.பார்த்தீபவர்ணன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் உறுப்பினர் மு.நமச்சிவாயம் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
Related posts:
|
|