மக்களை அடக்குவது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!

Tuesday, April 4th, 2023

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவு ஊடாக மக்களை அடக்குவது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும், கிளர்ச்சியாளர்கள் வெறியாட்டம் போட ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்குப் பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு வெளியிடப்படுவது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவு இம்மாதம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சட்டவரைவு சபையில் முன்வைக்கப்படுவதற்கு முன்னரே அது பேராபத்து என்று எதிர்க்கட்சியினரும் அவர்களின் ஆதரவாளர்களும் துள்ளிக் குதிக்கின்றனர்.

முதலில் சட்டவரைவு முன்வைக்கப்பட்ட பின்னர் அதிலுள்ள பரிந்துரைகளைப் பார்க்கவேண்டும். அதன்பின்னர் விமர்சனங்களை முன்வைக்கவேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது சர்வாதிகார அரசு அல்ல. நாடாளுமன்றத்துக்குள்ளும் வெளியிலும் அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடிய பின்னர்தான் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவு நிறைவேற்றப்படும்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு மிக முக்கியமானது. அதைக் கேள்விக்குட்படுத்தும் வகையில் செயற்பட எவருக்கும் அனுமதி இல்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: