மக்களின் வாழ்க்கையை ஒளிமயமாக்கும் பாரிய அபிவிருத்திப் புரட்சி நாட்டுக்குள் மேற்கொள்ளப்படும் – விவசாயத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே உறுதி!
Tuesday, December 14th, 2021இலங்கை 2022 ஆம் ஆண்டில் நாட்டு மக்களின் வாழ்க்கையை ஒளிமயமாக்கும் பாரிய அபிவிருத்திப் புரட்சி நாட்டுக்குள் மேற்கொள்ளப்படும் என விவசாயத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
கண்டி நாவலப்பிட்டியில் உள்ள அமைச்சரின் ஒருங்கிணைப்பு அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கூறுகையில் –
“எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் ஆறு மாதங்களே எம்மால் சுதந்திரமாக பணியாற்ற முடிந்தது.
முழு உலகத்தையும் பலியெடுத்த கொரோனா தொற்று எமது நாட்டையும் பீடித்துக்கொண்டது. எனினும் அரசாங்கம் மக்களை நோயால் மரணிக்கவிடாது, ஏனைய வேலைகளுக்கு முன்னதாக மக்களை வாழ வைக்கும் தடுப்பூசி வேலைத்திட்டத்தை ஆரம்பித்தது.
நாம் இப்போது உலகில் முன்னேறிய நாடுகளைத் தாண்டி முன்னுக்கு வந்துள்ளோம். இதனால், அடுத்தாண்டு எமது நாட்டுக்கு மீண்டும் நல்ல காலம் பிறக்கும்.
குறிப்பாக எமது பிரதேச, நகர சபைகளின் உறுப்பினர்கள், எதிர்க்கட்சிகள் கூறுவதை கேட்டு, செய்வதை பார்த்து அரசாங்கம் மீது வெறுப்படைய வேண்டாம். உங்களை மன ரீதியாக வீழ்ச்சியடையச் செய்து நாட்டை அராஜக நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே அவர்களின் தேவையாக இருக்கின்றது.
இந்தாண்டு மிகப் பெரிய தொகை பணம் கிராமங்களின் அபிவிருத்திக்காக கிடைத்துள்ளது. கிராம மக்களுடன் இணைந்து அந்தப் பணத்தை பயன்படுத்தி மீண்டும் கிராமங்களை அபிவிருத்தி செய்ய தயாராகுங்கள்” என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|