போக்குவரத்துக்கு அதிகபணம் செலவு – முல்லைத்தீவு ஆசிரியர்கள் கவலை!

Wednesday, April 3rd, 2019

முல்லைத்தீவு – புத்துவெட்டுவான், பழையமுறிகண்டி, ஐயன்கூன் குளம்  ஆகியபாடசாலைகளில் கடமையாற்றும் வெளிமாவட்ட ஆசிரியர்கள் நாளொன்றுக்கு போக்குவரத்துக்காக அதிகபணத்தை செலவிடவேண்டியநிலைமை காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்குட்பட்ட ஐயன் குளம், புத்துவெட்டுவான், பழையமுறிகண்டி போன்ற இடங்களுக்கான போக்குவரத்துவசதியின்மை, வீதிகள் புனரமைக்கப்படாமை போன்றகாரணங்களால் இப்பிரதேசங்களில் வாழும் மக்கள் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் போக்குவரத்து செய்வதிலும் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்துவருகின்றனர்.

இந்நிலையில் புத்துவெட்டுவான், பழையமுறிகண்டி, ஐயன் குளம், ஆகியபாடசாலைகளில் தங்கியிருக்கக் கூடிய வசதிவாய்ப்புக்கள் இல்லாதநிலையில் வெளிமாவட்டங்களிலிருந்து அதிகாலை 5 மணிக்குப் புறப்பட்டு ஏ-9 வீதி கொக்காவில் சந்தியை வந்தடைகின்றனர்.

அதன் பின்னர் அங்கிருந்து குறித்த பாடசாலைக்குச் செல்வதற்கு வாகனவசதிகள் இல்லாத நிலையில் தினமும் 600 ரூபாவிற்குமுச்சக்கரவண்டியை வாடகைக்கு அமர்த்தி பாடசாலைக்குச் சென்று கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதுடன், பாடசாலை முடிந்து மீண்டும் 600 ரூபாவுக்கு மீண்டும் வண்டியை வாடகைக்கு அமர்த்தி கொக்காவில் வீடுகளுக்குச் செல்கின்றனர்.

இவ்வாறு வாரத்தில் ஐந்து நாட்களுக்கும் ஆசிரியர்கள் சொல்லொணாத் துன்பங்களைஅனுபவிப்பதுமட்டுமல்லாது பெருந்தொகைப்பணத்தையும் போக்குவரத்துக்காக செலவிடுகின்றநிலைமை காணப்படுகின்றது.

Related posts: