பொலிஸ் நிலையம் முற்றுகை: வடமராட்சியில் பதற்றம்!

Tuesday, September 18th, 2018

வடமராட்சி கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட வெளி மாவட்ட மீனவர்களை அப்பகுதி மீனவர்கள் மடக்கிக் பிடித்துள்ளதுடன் குறித்த மீனவர்களை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த வடமராட்சி மீனவர்கள் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வெளி மாவட்ட மீனவர்களை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த நிலையில் அவர்களை நீதிமன்றில் ஒப்படைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

எனினும் மீனவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டாம் எனக் கூறியும், மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரி குறித்த இடத்திற்கு வர வேண்டும் எனவும் குறிப்பிட்டு பொலிஸ் நிலையத்தை வடமராட்சி மீனவர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

வடமராட்சி கிழக்கின் பல இடங்களிலும் வெளிமாவட்ட மீனவர்கள் பெருமளவிலானவர்கள் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதை நிறுத்தக்கோரி அப்பகுதி மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், அரசியல் வாதிகளின் கவனத்திற்கும் கொண்டு சென்றனர். எனினும் எந்த நடவடிக்கையும் இதுவரை உரிய முறையில் எடுக்கப்படவில்லை.

இதனால் இதற்கு சரியான தீர்வு கிடைக்கும் வரை தாம் கடற்தொழிலில் ஈடுபடப் போவதில்லை என்ற தீர்மானத்தை வடமராட்சி மீனவர்கள் முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிலையிலேயே வடமராட்சியில் வெளி மாவட்ட மீனவர்கள் இன்று மீன்பிடியில் ஈடுபடும் போது அப்பகுதி மீனவர்கள் அவர்களை மடக்கிப் பிடித்துள்ளனர். மேலும், குறித்த பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: