பொலிஸ் அதிகாரியால் விடுமுறை மறுப்பு – திருக்கோவில் பொலிஸ் நிலைய பொலிசார் மீது துப்பாக்கிச்சூடு – பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு!

Saturday, December 25th, 2021

அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில், பொலிஸ் உத்தியோக்கத்தர் ஒருவர் நேற்று (24) இரவு 10 மணியளவில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தரும் உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய, குறித்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பலியான பொலிசாரின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.

குறித்த சம்பவத்தில், காயமடைந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட மேலும் இருவர் திருக்கோவில் மற்றும் அக்கறைப்பற்று வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில், சிகிச்சைபெற்றுவருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக  பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

முன்பதாக துப்பாக்கிபிரயோகம் மேற்கொண்ட பொலிஸ் சாஜன் தப்பி ஓடிய நிலையில் மொனராகலையில்வைத்து அவரை கைது செய்துள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் மொனராகலையை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் குமார என்பவர் வீடு செல்வதற்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் லீவு கோரியுள்ளார்.

இந்த நிலையில் அவருக்கு பொலிஸ் பொறுப்பதிகாரி தெய்கம லீவு வழங்காததையடுத்து ஆத்திரமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் சம்பவதினமான நேற்று வெள்ளிக்கிழமை இரவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வாகனத்தில் ஏறி ரோந்து நடவடிக்கைக்கு செல்வதற்கு தயாராகி இருந்தபோது அவர் மீது ரி 56 துப்பாக்கியால் பொலிஸ்சாஜன் சரமாரியாக துப்பாகிபிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

இதனையடுத்து அவரை தடுக்க முற்பட்ட பொலிசார் மீது அவர் துப்பாக்கி பிரயோகம் செய்ததையடுத்து சம்பவ இடத்தில் 3 பொலிசார் உயிரிழந்ததுடன் பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட 3 படுகாயமடைந்துள்ள நிலையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த வைத்தியசாலையில் வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர் அங்கிருந்து மோட்டர்சைக்கிளில் தப்பிச் சென்ற நிலையில் அத்திமலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து அவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சம்பவத்தையடுத்து அந்தபகுதியில் பெரும் பதற்றம் நிலை ஏற்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு கிழக்கு மாகாணா சிரேஸ் பிரதி பொலிஸ் மா அதிபர் சென்று நிலமையை ஆராய்ந்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிசாருக்கு பணித்துள்ளார்.

இது தொடர்பாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: