பொலிஸாரும், பாதுகாப்பு படையினரும் பொறுப்புடன் செயற்படுவது அவசியம் – அமைச்சர் சரத் வீரசேகர வலியுறுத்து!

Monday, May 31st, 2021

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீள வேண்டுமாயின் கடினமான தீர்மானங்களை செயற்படுத்த நேரிடும் என சுட்டிக்காட்டியுள்ள பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பொலிஸாரின் செயற்பாடுகளுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும்  தெரிவித்தள்ளார்.

பயணத்தடை மற்றும் பொலிஸாரின் செயற்பாடுகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர்  மேலும் தெரிவிக்கையில் –

கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும், பொது மக்களை பாதுகாக்கவும் அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து பொறுப்புடன் செயற்பட்டுள்ளது.

பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினரது ஒத்துழைப்பினை பெற்றுக் கொள்வது இன்றியமையாததாக காணப்படுகிறது.

இந்நிலையில் கொவிட் தாக்கத்தை கட்டுப்படுத்தவும், பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்கில் நாடு தழுவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளன.

பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் வீதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுப்படுகிறார்கள். அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் ஒரு தரப்பினர் அதனையும் முறையற்ற வகையில் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

வீதியில் கடமையில் ஈடுப்படும் பொலிஸாருக்கும், பொது மக்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஒரு சில பிரதேசங்களில் இடம் பெற்றுள்ளன. பொது மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் கடமையில் ஈடுபட வேண்டாம் எனவும் கடினமான முறையில் செயற்பட வேண்டாம் எனவும் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் விசேட சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையிலும் பொது மக்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவே பொலிஸாரும், பாதுகாப்பு படையினரும் வீதியில் கடமையில் ஈடுப்படுகிறார்கள்.

பொது மக்களும் அவர்களின் மனநிலையினை புரிந்துக் கொண்டு செயற்பட வேண்டும். இரு தரப்பினரும் அனுசரித்து செயற்பட்டால் பிரச்சினைகள் தோற்றம் பெறாது. பொது மக்களை காட்டிலும் பொலிஸாரும், பாதுகாப்பு படையினரும் மிகவும் பொறுப்புடன் செயற்படுவது அவசியமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: