பொறியியல் துறை மற்றும் நிர்மாணத்துறைகளில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் – வடக்குமாகாண ஆளுநர் வலியுறுத்து!

Friday, February 23rd, 2024

பொறியியல் துறை மற்றும் நிர்மாணத்துறைகளில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என வடக்குமாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழில்நுட்பவியல் சேவையாளர் சங்கத்தின் வட பிராந்திய சங்கத்தினரால் நடாத்தப்பட்ட தொழில்நுட்ப வழிகாட்டி நூல் வெளியீட்டு விழாவில் பிரதம விருந்தினராக கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வானது நேற்று (22/02/2024) வடமாகாண பிரதம செயலாளர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளதோடு, விஷேட விருந்தினராக மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம் சமன் பந்துலசேன அவர்களும் கலந்துக்கொண்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த வட மாகாண ஆளுநர், பொறியியல் மற்றும் கட்டுமான துறைகளில் திட்டமிடல் என்பது மிக முக்கியமான ஒரு விடயமாகும். உரிய திட்டமிடல் காணப்படாததன் காரணமாக பல்வேறு சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. காணி உரிமை தொடர்பில் உறுதிப்பாட்டை பெற்றுக் கொள்ளாமை மிகப் பிரதான சிக்கலாக காணப்படுகிறது.

காணி உறுதியை உறுதிப்படுத்திக் கொள்வதும், பிரதேச செயலாளரிடம் அனுமதி பெற்று கொள்வதும் இன்றியமையாத விடயங்களாகும். இதனூடாக தேவையற்ற சவால்களை தவிர்த்துக்கொள்ள முடியும். அத்தோடு அனர்த்தங்கள் தொடர்பான பகுப்பாய்வுகள் தொடர்பிலும் முன்னரே ஆராய்தல் மிக முக்கியமான விடயமாக காணப்படுகிறது.

அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான எவ்வித முன் ஆய்வுகளும் இன்றி நிர்மாணங்கள் மேற்கொள்ளப்படுவதால் தேவையற்ற அனர்த்தங்கள் ஏற்படுகின்றன. உரிய திட்டமிடலின்றி முன்னெடுக்கப்படும் கட்டட நிர்மாணங்கள் காணப்படும் பகுதிகளில் மழைக்காலங்களில் வெள்ளம் தங்குகின்றது.

மக்கள் பாவனைக்கு உகந்த வகையில் கட்டட நிர்மாணங்களை மேற்கொள்வது முக்கியமான விடயமாகும். திட்டமிடல்களின் போது அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் . அதேவேளை பயனாளர்கள் நலன்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: