பொது இடங்களுக்கு செல்பவர்கள் தடுப்பூசி அட்டைகளை வைத்திருப்பதை கட்டாயமாக்க ஆலோசனை – ஜனாதிபதி தெரிவிப்பு!

Saturday, July 31st, 2021

நாட்டின் அனைத்துப் பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையில், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் குறித்த கணக்கெடுப்பு ஒன்றினை மேற்கொள்ளுமாறு,  துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்காலத்தில் அரச நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களுக்கு பிரவேசிப்போர், தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்கள் என்பதனை உறுதிப்படுத்தும் அட்டையைத் தம்வசம் வைத்திருப்பதை கட்டாயமாக்குவது குறித்தும் அவதானம் செலுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி ஏற்றுதல் மற்றும் எதிர்காலச் செயற்பாடுகள் குறித்து கொவிட் ஒழிப்பு விசேட குழுவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இவ்வாறு விடுத்துள்ளார்.

கொவிட் நோயாளர்கள் மற்றும் மரணமடைந்தவர்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக்கேற்ப, அவர்களில் சுமார் 95 சதவீதமானவர்கள் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டிருந்தபோதும், அவற்றைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் குறித்து விசாரணை செய்வதும், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கு ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதேச செயலக மட்டத்தில் துரித கணக்கெடுப்பினை சில தினங்களுக்குள் மேற்கொண்டு, தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் தொடர்பான அறிக்கை ஒன்றைப் தயாரிக்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார். தடுப்பூசிகளைப் பெற்றுக்கொடுக்கும் பொறுப்பை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது.

நோய் பரவுவதை தடுக்கும் வகையில் செயற்படுவதும் தடுப்பூசிகளை விரைவாகப் பெற்றுக் கொள்வதும் மக்களின் கடமையாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை தடுப்பூசி வழங்கலில் நாளாந்தம் மகத்தான இலக்கை அடையவும், அந்த நிலையைத் தொடர்ந்து பேணவும் அர்ப்பணிப்போடு பணியாற்றும் சுகாதார துறையினர், முப்படையினர் மற்றும் ஏனைய அனைத்து துறையினருக்கும் பாராட்டுக்களையும் தெரவித்துள்ளார்.

கடந்த இரு தினங்களாக நாளொன்றில் ஐந்து இலட்சத்திற்கும் அதிக மக்களுக்கு கொவிட் 19 தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது. நாடு ஒன்றின் சனத்தொகை விகிதாசார அடிப்படையில் – வாரந்தோறும் எடுக்கப்படும் தடுப்பு மருந்து வழங்கல் உலகளாவிய எண்ணிக்கை கணக்கெடுப்பில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக, உலகில் முதலிடத்தில் இலங்கை இருப்பது ஒரு பெரிய சாதனை என்றே தான் கருதுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: