பொது இடங்களில் பட்டாசுகள் கொளுத்துவது தவறு – யாழ். நீதிமன்றம் எச்சரிக்கை!

Sunday, February 17th, 2019

பொது இடங்கள் மற்றும் வீதிகளில் வெடிகொளுத்துவது தவறாகும். சாவு ஊர்வலமாக இருந்தாலும் வெடி கொளுத்தும் போது பொது நலனைக் கருத்தில் எடுக்க வேண்டும். வீதியில் பயணிப்பவர்களுக்கு இடையூறாக வெடிகொளுத்துவதை ஏற்க முடியாது என யாழ் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.போல் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் இருபாலைச் சந்தியில் பிரதான வீதியூடாகப் பயணித்த ஹஏஸ் வான் ஒன்றின் கண்ணாடிப் பகுதியில் வெடி வீழ்ந்ததால் கண்ணாடி முற்றாகச் சேதமடைந்தது.

அந்தப் பகுதியால் வந்த இறுதி ஊர்வலம் ஒன்றில் கொளுத்தப்பட்ட வெடியே வான் மீது வீழ்ந்து அதன் கண்ணாடி சேதமடைந்தது.

இதனையடுத்து அந்த இறுதி ஊர்வலத்துடன் வெடி கொளுத்தி வந்த ஒருவரைக் கண்டுகொண்ட வானின் உரிமையாளர் தனது அலைபேசியில் ஒளிப்படம் எடுத்துள்ளார். அத்துடன் தனது வான் கண்ணாடியை மாற்றியமைப்பதற்கு 57 ஆயிரம் ரூபா பணத்தை வழங்குமாறும் வெடியுடன் வந்த நபரிடம் சாரதி கேட்டுள்ளார்.

எனினும் இரு தரப்பும் இடையே இணக்கம் ஏற்படாமையினால் சாரதி கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் வெடியுடன் வந்த நபரின் ஒளிப்படத்தை சமர்ப்பித்து முறைப்பாடு வழங்கினார்.

அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இரு தரப்பையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.

குற்றஞ்சாட்டப்பட்டவர் தான் வான் மீது வெடிகொளுத்தி போட்டதற்கு ஆதாரம் இல்லை. அவர் வெடியை வைத்திருந்ததால் அவர் மீது பழி போட முடியாது. வாகனத்துக்கு வெடிகொளுத்தி எறியவில்லை. அவ் வழியால் பயணித்ததால் வாகனத்தில் பட்டுவிட்டது என்று குற்றஞ்சாட்டப்பட்டவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கூறினார்.

முறைப்பாட்டாளரால் வழங்கப்பட்ட ஒளிப்படத்தில் வேறு எவருமே வெடி வைத்திருப்பதாக இல்லை. பொது இடத்தில் வீதிகளில் வெடி கொளுத்துவது தவறாகும். இறுதி ஊர்வலத்தில் வெடிகொளுத்தும் போது பொது போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்று எச்சரித்த நீதிவான் வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

Related posts: