பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

Tuesday, May 7th, 2019

நாட்டில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக பேருந்து உரிமையாளர்களின் வருமானம் 20 வீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய ​போக்குவரத்து ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பேருந்து சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ​தேசிய ​போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பேருந்து உரிமையாளர்களின் நிலைப்பாட்டை கருத்தில்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தொடர்ந்தும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அனைத்து பகுதிகளிலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில்கொண்டு மாகாணங்களுக்கு இடையிலான பேருந்துகளுக்கு மாதாந்தம் வழங்கப்படும் வீதி அனுமதிப்பத்திரத்துக்கான கட்டணத்தில் நிவாரணம் பெற்றுக்கொடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கிணங்க, கடந்த 21 ஆம் திகதி முதல் எதிர்வரும் 21 ஆம் திகதிக்கிடையில் அறவிடப்படும் வீதி அனுமதிப்பத்திர கட்டணத்தை 50 வீதத்தினால் குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related posts: