பேருந்துகளுக்கு பாதுகாப்பு வழங்க கோரிக்கை!
Friday, December 2nd, 2016பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடும் இ.போ.ச. பஸ்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதால் தமக்கு பாதுகாப்பு வழங்குமாறு இ.போ.ச. சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்து விதி மீறல் தொடர்பான அபராத தொகையை ரூபா 25,000 ஆக மாற்றும் தீர்மானத்திற்கு எதிராக தனியார் பஸ் உரிமையாளர்கள், பாடசாலை போக்குவரத்து, முச்சக்கர வண்டி சங்கங்கள் ஆகியன இணைந்து இன்று (02) நாடு தழுவிய ரீதியில் பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இதனையடுத்து, மக்களின் போக்குவரத்து தேவை கருதி அதிகளவான இ.போ.ச. பஸ்கள் சேவையில் ஈடுபட்டு வருவதோடு, ஒரு சில தனியார் பஸ்களும் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், ஒரு சில நாசகாரர்களால் குறித்த பஸ்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
சுமார் 20 இற்கும் மேற்பட்ட இ.போ.ச. பஸ்கள் மீது இவ்வாறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சபை தெரிவித்துள்ளதோடு, பொதுமக்களின் அசெளகரியங்களை தவிர்க்கும் வகையில் மேற்கொள்ளப்படும் போக்குவரத்து சேவை இடையூறின்றி வழங்கும் பொருட்டு குறித்த பஸ்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் (02) புகையிரத திணைக்களத்தினாலும் பணி பகிஷ்கரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவிருந்த நிலையில், நேற்று (01) ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையை அடுத்து கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|