பேதங்களுக்கு அப்பால் நாட்டுக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க அழைப்பு!
Monday, December 5th, 2022
இன, மத பேதங்களை கடந்து ஐக்கிய இலங்கைக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் இதன்மூலம் நாடடின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் முயற்சிகளை தவிர்த்துக் கொள்ள முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே கலந்துரையாடப்பட்டதை போன்று நாட்டிலுள்ள சட்டத்தரணிகளும் பங்களிப்புச் செய்தால் அந்த இலக்கை அடைய முடியும்.
ஒட்டுமொத்த அமைப்பு முறையும் இளைய தலைமுறையினரால் கேள்விக்குட்படுத்தப்படும்போது நாம் அனைவரும் சவாலுக்கு உள்ளாக நேரிடுகிறது.இது பொருளாதார சவாலிலும் பார்க்க பாரதுரமானது.
கடந்த கால காயங்களை ஆற்றுவதா அல்லது அதனை மேலும் வளரவிடுவதா என தீர்மானிப்பதற்கான சந்தர்ப்பம் தற்போது நாட்டுக்கு கிடைத்துள்ளது.
நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை சீர்குலைக்காமல் இன, மத வேறுபாடு மற்றும் மக்களின் சில யதார்த்தமான கவலைகளால் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது தொடர்பில் ஆராய்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்
நாட்டிலுள்ள அனைத்து சட்டத்தரணிகளும் ஒன்று சேர்ந்தால் அனைத்து பாரிய பிரச்சினைகளையும் பின்தள்ளி 75ஆவது சுதந்திர தின நிகழ்வின்போது நாம் அனைவரும் ஒரு தாய் மக்களாக இணைய முடியும்.
இது தத்தமது கருத்துக்களுக்கு வரவேற்பளிப்பதற்கும் மக்கள் அனுபவிக்கும் சுதந்திரத்தை உள்ளடக்கிய அரசியலமைப்பொன்றை தயாரிப்பதற்கும் அதேவேளை அரசியலமைப்புக்குட்பட்ட அரசாங்கமொன்றை முன்னெடுத்துச் செல்வதற்கும் வழிவகுக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சட்டத்தரணியாகி 50 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்திருந்த ஜனாதிபதிக்கான கௌரவிப்பு நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


