பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு – கூட்டு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளுமாறு பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு ஜனாதிபதி ரணில் பணிப்பு!

Saturday, December 9th, 2023

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளுமாறு பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கோரும் குறைந்தபட்ச நாளாந்த வேதனமாக 1,700 ரூபாவை வழங்குதல் அல்லது அதிகரிக்கப்படும் வேதன அளவு குறித்து எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு அறியப்படுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதானிகளுடன் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த முறை பாதீட்டு திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்திற்கு அமைய, பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்கள் தங்களது வேலைத்திட்டங்களை எவ்வாறு தயாரிக்கின்றன என்பதை அறிந்து கொள்வதற்காகவே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி உரிமை வழங்குவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

அது குறித்த எதிர்கால நடவடிக்கைகளுக்காக குழுக்களை நியமிக்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வீட்டுத் தேவைகள் குறித்து ஆலோசிப்பதற்காக குழுவொன்றை நியமிக்கவும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மற்றுமொரு குழுவொன்றை நியமிக்கவும் இதன்போது முன்மொழியப்பட்டது.

நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு, ஏற்றுமதிப் பொருளாதாரத்தில் தமக்கு வலுவான நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு அனைவரினதும் பங்களிப்பு அவசியம் என வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: