சேதனப் பசளையை பற்றாக்குறையின்றி விவசாயிகளுக்கு வழங்குவதற்கு முறையான பொறிமுறையூடாக நடவடிக்கை – துறைசார் தரப்பினருக்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச பணிப்பு!

Thursday, May 27th, 2021

பெரும்போகத்திற்கு தேவையான சேதனப் பசளையை பற்றாக்குறையின்றி விவசாயிகளுக்கு வழங்குவதற்கு ஒரு முறையான திட்டத்தினூடாக நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார்..

அத்துடன் இதற்காக துறைசார் அனைத்து துறைகளையும் இணைத்து, விரிவான பொறிமுறை ஒன்றை நடைமுறைப்படுத்தவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

விவசாயத்துறை அமைச்சின் அதிகாரிகள் மற்றும் சேதனப் பசளை உற்பத்தியாளர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி –

ஆரோக்கியமான உற்பத்தித்திறன் மிக்க பிரஜைகளை உருவாக்குவதற்கு நச்சுத்தன்மையற்ற உணவை பெற்றுக்கொள்வதற்கான மக்களின் உரிமை, எமது “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைத் திட்டத்தில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அதனை யதார்த்தமாக்குவதற்கு நாட்டின் விவசாயதுறையை முழுமையாக சேதனப் பசளைக்கு மாற்றுவது எமது நோக்கமாகும்.

அத்தடன் எதிர்கால தலைமுறையின் நலனுக்காக மேற்கொள்ளப்படும் இந்த முயற்சியில் விவசாயிகளுக்கு அசௌகரியங்கள் ஏற்படாத வகையில் இலக்குகளை அடைந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம் இந்த திட்டத்தை வெற்றிகொள்ள இதற்காக சேதன பசளை உற்பத்தி அளவை அதிகரிக்க வேண்டும்.உற்பத்தி செய்யப்படும் பசளைகளின் அளவு குறித்து திருப்தியடையாத பட்சத்தில் உயர்தரம் வாய்ந்த சேதனப் பசளையை தேவையானளவு இறக்குமதி செய்யுமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் சில போகங்களுக்குள் விவசாயத்துறைக்கு தேவையான சேதனப் பசளையின் அளவை நாட்டில் உற்பத்தி செய்ய முடியுமென உர உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். இரசாயன உரத்தை இறக்குமதி செய்வதற்காக வருடாந்தம் அரசாங்கம் அதிகளவு நிதியைச் செலவிடுகின்றது. அத்தொகையை சேதனப் பசளை உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு பயன்படுத்த முடியும்.

விவசாயத்துறை அமைச்சின் ஊடாக இந்த வேலைத்திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்குப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை இந்த திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்கு, அரச வங்கிகள், குறைந்த வட்டிக்கு கடன் வசதிகளை வழங்கவும் முன்வந்துள்ளன. சேதனப் பசளையைப் பயன்படுத்துவதற்கு, மாவட்ட மட்டத்தில், விவசாய ஆலோசகர்கள் மற்றும் விவசாய ஆராய்ச்சி அதிகாரிகளைத் தெளிவூட்டுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் உற்பத்தி செய்யப்படும் சேதனப் பசளைகள் தேசிய உர செயலகத்தின் ஊடாக கொள்வனவு செய்வதற்கு, நெல் உட்பட வேறு பயிர்களுக்கும் ஏற்ப உரத்தினை விநியோகிப்பதற்கு தேவையான பொறிமுறை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர்கள் சுட்டிக்காட்டினர்.

இதனடிப்படையில் பெரும்போகத்திற்கு முன்னர் கிராமிய மட்டத்தில் மண் வளத்தைப் பரிசோதித்து பயன்படுத்தப்பட வேண்டிய உரத்தின் அளவு குறித்து அறிக்கை ஒன்றை பெற்றுக்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: