பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் முகாமைத்துவத்துக்கும் இடையில் ஏற்படும் தொழிற்சங்க முரண்பாடுகளில் பொலிஸாரின் தலையீடு சிக்கலானது – நாடாளுமன்ற உறுப்பினர்களால் சுட்டிக்காட்டு!

Saturday, September 2nd, 2023

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் முகாமைத்துவத்துக்கும் இடையில் ஏற்படும் பல்வேறு தொழிற்சங்க முரண்பாடுகளில் பொலிஸாரின் தலையீடு சிக்கலானது என அண்மையில் இடம்பெற்ற பொதுமக்கள் பாதுகாப்பு பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

ஒரு தரப்பினரால் பொலிஸில் எதாவது முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போது பொலிஸார் தலையிடாமல் இருக்க முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

கிராம மட்டத்தில் போதைப்பொருள் பாவனை, பரவல் மற்றும் அடிமையானவர்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான வேலைத்திட்டம் தொடர்பில் குழு வினவிய போது, போதைப்பொருள் தொடர்பான விசாரணை பொலிஸாருக்கு கிடைக்கும் பட்சத்தில் முன்பு போன்றில்லாமல், சட்டத்துக்கு முரணாக வைத்திருத்தல் மற்றும் பணம் தூய்தாக்கல் தொடர்பிலும் விசாரணை செய்யப்படுவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

போக்குவரத்துக் குற்றங்கள் தொடர்பில் போக்குவரத்துப் பொலிஸாரால் வீடியோ ஒளிப்பதிவு செய்து ஊடகங்களுக்கு வழங்குவதன் நெறிமுறை பற்றிக் குழு கவனம் செலுத்தியது. எந்தவொரு குற்றவாளியினதும் தனிப்பட்ட விடயங்களுக்கு பொலிஸார் கௌரவமளிக்க வேண்டும் என்பது குழுவின் நிலைப்பாடாக இருந்தது. இது தொடர்பில் சிக்கல் நிலவுவதாக ஏற்றுக்கொண்ட பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, இது தொடர்பில் கண்டறிந்து அதனைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: