பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள்,உரிமை மீறல்களை கண்டறிவதற்கு நாடாளுமன்ற விசேட குழு – சபாநாயகரிடம் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை!

Friday, March 5th, 2021

இலங்கையில் பெண்களுக்கு எதிராக இடம்பெற்ற பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமை மீறல்களை கண்டறிந்து பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்யக்கூடிய பரிந்துரைகளை வழங்குவதற்கு நாடாளுமன்ற விசேட குழுவொன்றை அமைக்குமாறு அனைத்து பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் எழுத்து மூலம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். 

இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே தலைமையிலான நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியமே இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

உத்தேச நாடாளுமன்ற குழுவும் அதன் தவிசாளரும் சபாநாயகரால் நியமிக்கப்பட வேண்டும் என்பதுடன் அதன் அங்கத்தவர்கள் 25 உறுப்பினர்களை கொண்டமைதல் வேண்டும் எனவும் பிரேரிக்கப்பட்டுள்ளது.

குழு அதன் முதல் கூட்டத்திலிருந்து ஒரு வருட காலத்திற்குள் குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பித்தல் வேண்டும் என்பதுடன் அது சமர்ப்பிக்கப்பட்டு 08 வாரங்களில் குறித்த அறிக்கை தொடர்பாக விடயத்துக்குப் பொறுப்பான  அமைச்சர்களின் அவதானிப்புகளையும் அது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகளையும் நாடாளுமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும் என பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோசனை முன்வைத்துள்ளனர்.

இந்த பிரேரணை நாடாளுமன்றத்தின் 03 ஆம் ஒழுங்குப் புத்தகத்துக்கான அனுபந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.

அதேநேரம் தொழில் வாய்ப்பு, பதவி உயர்வு வாய்ப்புக்கள் மற்றும் பணியிடங்களில் துயன்புறுத்தல்கள் உள்ளிட்ட அனைத்து வித பால்நிலை அடிப்படையிலான பாரபட்சங்கள் பற்றிய பெண்களின் குறைகளை கேட்டல், அனைத்து துறைகளிலும் மற்றும் அனைத்து மட்டங்களிலும் போதியளவான உள்ளூர் வளங்களின் ஒதுக்கீடு மற்றும் இலங்கையில் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான அணுகல் ஆகியவற்றை பரிசீலித்தல் மற்றும் அதற்காக முன்னிற்றல் உள்ளிட்ட 10 யோசனைகள் இந்த  நாடாளுமன்ற குழுவால் நடைபெறவேண்டும் எனவும் பெண் உறுப்பினர்கள் பிரேரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: