புலிகளின் கனவைச் சிதைத்தார் அமைச்சர் ஐங்கரநேசன்;

Thursday, May 4th, 2017

புலிகள் தமது பயிற்சி முகாமாகப் பாவித்தார்கள் என்பதால் தாமும் அதை இராணுவ முகாமாகப் பாவிக்கின்றோம் என்று படையினர் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அறிவியல் நகர்ப் பகுதியை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தை நடத்தி நாமே அறிவியல் நகரை மீண்டும் பல்கலைக்கழக வளாகமாக மாற்றினோம்.

புலிகளின் பயிற்சி முகாமும், படையினரின் முகாமும் இருந்த இடத்தில் இன்று மீண்டும் யாழ். பல்கலைக்கழகத்தின் விவசாய பீடமும், பொறியில் பீடமும் அமையப் பெற்றிருப்பதற்கு மத்திய அரசுடன் நாம் நடத்திய இணக்க அரசியல் வழிமுறையூடாக கடுமையாகப் போராடி இருக்கின்றோம்.

அப்போது உயர்கல்வி அமைச்சராக இருந்த அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க அவர்கள், கேட்டும் படையினர் அறிவியல் நகரை மீள ஒப்படைக்க மறுத்திருந்தார்கள். ஆனாலும் நாம் தொடர்ச்சியாக விடுத்த வேண்டுகோள் காரணமாக, கொக்காவில் உயர் கோபுரத்தை திறந்து வைக்க கிளிநொச்சிக்கு வருகை தந்திருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உரையாற்றும்போது,“அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டால் நாம் எல்லாவற்றையும் கொடுப்போம். இப்போது அவர் அறிவியல் நகரைக் கேட்கின்றார் நாங்கள் வழங்குகின்றோம்” என்று கூறியதுடன் அறிவியல் நகரை மீளவும் ஒப்படைத்தார்.

கிளிநொச்சியில் மீண்டும் விவசாய பீடமும், பொறியியல் பீடமும், தகவல் தொழில்நுட்ப பீடமும் அமையவேண்டும் என்பது பேராசிரியர் துரைராஜாவின் காலத்திலிருந்து யாழ். பல்கலைக்கழகத்தின் நீண்டகால கோரிக்கையாகவும் கனவாகவுமே இருந்தது.அந்தக் கனவையும் அதிலிருந்த நியாயத்தையுமே நாம் நிறைவேற்றி வைத்தோம்.

வடக்கு மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் கூறுவதுபோல்  பல் மருத்துவ பயிற்சி நிலையம் ஒன்றை அமைப்பதற்கு புலிகள் அத்திபாரம் அமைத்திருந்தால் புலிகளின் அந்தக் கனவை சிதைத்து, புலிகள் அமைத்த பல் மருத்துவ பயிற்சி நிலையத்துக்கான அத்திபாரத்தின் மேல், மாகாண அமைச்சர் ஐங்கரநேசன் இப்போது கால் நடை பயிற்சி நிலையத்தை அமைத்திருக்கின்றார்.

புலிகளின் கனவை ஐக்கிரநேசன் சிதைத்துவிட்டு,புலிகளின் கனவுகளில் ஒன்று நிறைவேறியிருக்கின்றது என்று கூறுவது வேடிக்கையாகும்.எனவே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியாகிய நாம் மீட்டெடுத்த அறிவியல் நகரில், மாகாணசபையில் அமைச்சராகி மூன்று வருடத்திற்குப் பிறகு காலடி வைத்துவிட்டு,நரி ஒன்று புலிக்கதை கூறி ஆதாயம் தேட முயற்சித்திருக்கின்றது.

வட மாகாண விவசாய அமைச்சரோ, அவர் சார்ந்த கட்சியினரோ எமது சாதனைகளையும்,நாம் எமது மக்களுக்குப் பெற்றுக்கொடுத்த சேவைகளையும் தமது அரசியல் காழ்ப்புனர்ச்சி காரணமாக மறைத்து ஆயிரம் பொய்களைக் கூறினாலும், உண்மைகள் ஒருபோதும் வரலாற்றை மாற்றி எழுதப்போவதில்லை என்பதை தமிழ்மக்கள் நன்கு அறிவார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எமக்கு உண்டு.

ஊடகப் பிரிவு

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி

Related posts:


கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ் பாடசாலைகள் திறக்கப்படலாம் - சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்ப...
நேட்டோவில் சேர்வதன் மூலம் ரஷ்யாவின் நலனுக்கு எதிராக செயற்பட்டதால் போர் மூண்டது - உக்ரைனை ஆக்கிரமிக்...
கொழும்பு செல்லும் புகையிரதத்தைக் கடப்பதில் ஏற்படும் தாமதமே யாழ் ராணி மாலையில் தாமதிக்கின்றது - அனுரா...