புதிய சட்டங்களை நிறைவேற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உண்டு- ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டு!

Friday, July 28th, 2023

பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்கு, புதிய சட்டங்களை நிறைவேற்றும் அதிகாரம், தமக்கு மாத்திரமன்றி, இதற்கு முன்னர் பதவியில் இருந்த நிறைவேற்று அதிகாரமுடைய ஏழு ஜனாதிபதிகளுக்கும் இருக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதேநேரம், புதிய சட்டங்களை நிறைவேற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உள்ளதாக ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற சர்வகட்சி கூட்டத்தின் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மாத்திரம் கலந்துரையாடுவது போதுமானதல்ல என குறிப்பிட்ட ஜனாதிபதி, அது முழு நாட்டிலும் தாக்கம் செலுத்தும் விடயம் என்பதால் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் தெரிவித்துள்ளார்.

தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் மற்றும் வடக்கு-கிழக்கு அபிவிருத்தித் திட்டம்குறித்து நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக இந்த சர்வகட்சி மாநாடு கூட்டப்பட்டது.

இந்த கூட்டத்தில், தேசிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் பங்கேற்காத நிலையில், ஏனைய பிரதான அரசியல் கட்சிகள் கலந்துகொண்டிருந்தன.

நாட்டிற்காக இந்த யோசனைகளை முன்வைப்பது மாத்திரமே தமது கடமையாகும். அதனை நாடாளுமன்றமே நிறைவேற்ற வேண்டும். நாடாளுமன்றத்தில் ஒரேயொரு வாக்கு மட்டும் வைத்துக்கொண்டு இதனை செய்ய முடியாது.

இந்தப் பணிகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைவரும் கூட்டாக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.

ஒன்பது மாகாண சபைகளில் ஏழு மாகாணசபைகள் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் அமைந்துள்ளன. எதிர்காலத்தில் மாகாண சபை முறைமையை தொடர்ந்து முன்னெடுக்க எதிர்பார்த்தால், ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ள குறைபாடுகள் தீர்க்கப்பட வேண்டும்.

முதல் பட்டியலில் உள்ள, மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டிய பல விடயங்கள் மத்திய அரசாங்கத்தின் கீழ் இருக்கின்றன. எனவே அந்த அதிகாரங்களைப் போன்றே விவசாயம் மற்றும் சுற்றுலா போன்ற துறைகளில் கீழ்மட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான அதிகாரங்களும் மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டும்.

நாட்டிற்கான கொள்கைகளை மத்திய அரசாங்கம் வகுக்க வேண்டும். அனைத்து துறைகளிலும் அபிவிருத்தி நடவடிக்கைகளை உரிய முறையில் அமுல்படுத்துவதற்கு தேவையான வசதிகளை மாகாண சபை வழங்க வேண்டும்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி தீர்மானம் எடுக்க வேண்டும்.

மாகாண சபை உறுப்பினர்கள் பதவியை வகித்துக் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அந்தப் பதவியை வகித்தவாரே மாகாணசபை உறுப்பினராக செயற்படுவது தொடர்பிலும் முன்மொழியப்பட்டுள்ளது.

அது தொடர்பில் கலந்துரையாடி இறுதி தீர்மானத்தை எடுக்க முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அதிகார பகிர்வா அல்லது மாகாண சபை தேர்தலா, இவை இரண்டில் ஒன்றை தெரிவு செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வகட்சி மாநாட்டில் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது

இதேவேளை, அடுத்த மாதம் மீண்டும் ஜனாதிபதி தலைமையில் சர்வ கட்சி கூட்டத்தை கூட்டுவதற்கு இணக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: