புதிய கல்வி கொள்கை குறித்த முன்னேற்ற அறிக்கை மே மாதம் கோப் குழுவில் சமர்ப்பிக்க கோரிக்கை!

Thursday, March 25th, 2021

புதிய கல்விக் கொள்கையைத் தயாரிக்கும் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து எதிர்வரும் மே மாதம் அறிக்கை ஒன்றை பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற குழுவில் சமர்ப்பிக்குமாறு அதன் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண வலியுறுத்தியுள்ளார்.

கலை பட்டதாரிகள் மத்தியில் காணப்படும் வேலையின்மை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட கணக்காய்வு அறிக்கை பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற குழுவில் ஆராயப்பட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த கொள்கை தயாரிப்பின் போது சம்பந்தப்பட்ட அமைச்சுகளையும் இணைத்துக் கொள்ளுமாறு கல்வி ஆணைக்குழுவுக்கு அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.

அதேநேரம் பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதையை இல்லாமல் செய்வது தொடர்பில் புதிய தேசிய கல்வி கொள்கை தயாரிப்பின்போது கவனம் செலுத்த வேண்டும் என பல்கலைக்கழக உபவேந்தர்கள் இங்கு வலியுறுத்தியிருந்தனர்.

கலை பட்டதாரிகளின் வேலைவாய்ப்பின்மை 50 வீதமாக அதிகரித்திருப்பது பிரச்சினைக்குரியது என்றும், இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் தொழில்நுட்பக் கல்வியை ஊக்குவிப்பதற்கு மாகாண மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன் இரண்டாம் நிலை பாடசாலைகளில் கல்வி கற்கும்போதே மாணவர்கள் தமக்கான பாடநெறிகளைத் தெரிவுசெய்வதற்கான மாற்று ஏற்பாடுகள் வழங்கப்பட வேண்டும் இதன் ஊடாக பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் எனவும் கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வேலைவாய்ப்பு சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டப்படிப்புகளை வடிவமைப்பதற்காக அரச மற்றும் தனியார் நிறுவனங்களை ஒருங்கிணைத்து ஒழுங்குபடுத்துவது தொடர்பில் ஆராயுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு, கோப் குழு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: