புதர்மண்டிக் காணப்படும் காணிகளை தூய்மையாக்க நடவடிக்கை வேண்டும் – ஈ.பி.டி.பியின் வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் அனுஷியா!
Wednesday, January 23rd, 2019வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் காணப்படும் தனியாருக்கு சொந்தமான காணிகள் பல புதர்மண்டிக் காணப்படுவதால் நோய்ப்பரவல் மற்றும் சமூக சீர்கேடுகள் ஏற்படுவதற்கான ஏதுநிலை காணப்படுகின்றது. இந்த அவலநிலையிலிருந்து எமது பிரதேசத்தை பாதுக்காக்க வேண்டியது எமது சபையின் கடமையாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் திருமதி ஜெயகாந்த் அனுஷியா வலியுறுத்தியுள்ளார்
வேலணை பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான முதலாவது அமர்வு இன்றையதினம் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதன்போது பிரேரணை ஒன்றை சபையில் சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
வேலணை பிரதேச சபைக்குட்பட்ட எல்லைக்குள் புதர் மண்டிக் காணப்படும் தனியாருக்கு சொந்தமான காணிகள் பல காணப்படகின்றன. இவற்றை பிரதேச சபை இனங்கண்டு அவற்றை சபையின் பொறுப்பிலெடுத்து துப்பரவாக்கி குறித்த காணிகளை சபையின் ஆளுகைக்குள் கொண்டுவருவதுடன் அக்காணிகளுள் குறிப்பிட்ட ஒரு கால எல்லையை நிர்ணயித்து உரிமையாளர்கள் வந்து பொறுப்பெடுக்குமாறு எச்சரிக்கை பதாகை போடுவதுடன் அவ்வாறு உரிமையாளர்கள் உரிமை கோரி வருமிடத்து அதற்கான பராமரிப்பு செலவு மற்றும் ஒரு தொகை தண்டம் அறவிடுவதன் மூலம் டெங்கு நோயின் தாக்கத்தையும் அதன் பெருக்கத்தையும் கட்டுப்படுத்த முடியும் என்பதுடன் சமூகச் சீர்கேடுகளையும் தடுப்பதனுடன் எமது பிரதேசத்தை தூய்மையாக்க முடியும்.
அந்தவகையில் எமது சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் உள்ள புதர்மண்டிக் காணப்படும் காணிகளை சபை இனங்கண்டு அவற்றை துரித கதியில் மேற்குறித்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை இச்சபையில் ஒரு பிரேரணையாக முன்வைக்கின்றேன்.
இந்த பிரேரணையானது எமது பிரதேசத்தின் சுகாதாரம் மற்றும் மக்களின் இயல்பு நிலைமைகளை பாதிப்பதாக அமைந்துள்ள முன்மொழிவாக இதை நான் இச்சபையில் முன்வைத்துள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார் குறித்த பிரேரணை சபையில் கடுமையான வாதப்பிரதிவாதங்களுக்க மத்தியில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|