பிளாஸ்டிக் பொருட்களை கடலினுள் வீசும் நாடுகளுள் இலங்கை முதலிடம்!
Thursday, June 9th, 2016
ஆரோக்கியமான சமுத்திரம், ஆரோக்கியமான புவி” எனும் தொனிப்பொருளில் உலக சமுத்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று கொழும்பில் ஆரம்பமாகியது.
உலகிலேயே பொலித்தீன் பாவனை மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை கடலில் வீசும் நாடுகளில் இலங்கை முதலிடத்தில் உள்ளது. மேலும் சட்ட விரோத மணல் அகழ்விலும் இலங்கை முன்னிலையில் இருப்பதாக மகாவலி அதிகார சபையின் தலைவர் உதய செனவிரட்னவினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மகாவலி அதிகார சபை மற்றும் சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் உலக சமுத்திர தின நிகழ்வுகள் தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்
உலகில் முதன் முதலாக 1992ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் சமுத்திரங்களை பாதுகாக்கும் திட்டமொன்று பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் அறிமுகப் படுத்தப்பட்டது
இதற்கிணங்க இலங்கையில் 2008ஆம் ஆண்டிலிருந்து உலக சமுத்திர தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. வழமைபோலவே சமுத்திரங்களின் பாதுகாப்பு மற்றும் சமுத்திரங்கள் அழிவடைவதை தடுப்பதற்கான மாற்று வழிமுறைகள் குறித்து மக்களை தெளிவுபடுத்தும் நோக்கில் இம்முறையும் சமுத்திர தினம் கொண்டாடப்படுகின்றது
கொழும்பு – முகத்துவாரம், காக்கை தீவு கடற்பகுதி மற்றும் வெள்ளவத்தை கடற் பகுதிகள் தூய்மைப்படுத்தப்பட இருப்பதுடன் கடற்பகுதிகளில் கழிவுகளை வீசுவதால் ஏற்படும் விபரீதங்கள் தொடர்பிலும் அப்பகுதி மக்கள் உள்ளிட்ட, நிகழ்வில் கலந்துகொள்ளும் பாடசாலை மாணவர்களுக்கும் கடற்படையினரால் தெளிவு படுத்தல் தொடர்பான செயலமர்வு ஒன்றும் இடம்பெற உள்ளது.
அதனை தொடர்ந்து கொழும்பு ஆனந்த குமாரசுவாமி மாவத்தையிலிருந்து கொள்ளுப்பிட்டி நோக்கி சுற்றுச் சூழலை பாதுகாப்போம் எனும் பெயரில் நடைபவனி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
உலகிலேயே பொலித்தீன் பாவனை மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை கடலில் வீசும் நாடுகளில் இலங்கை முதலிடத்தில் இருகின்றது அதுபோல 20 சத விகிதமான பொலித்தீன் பாவனை இலங்கையில் தடை விதிக்கப்பட்டிருந்தாலும் தற்போதைய நிலையில் பொலித்தீன் பாவனை சற்று குறைவடைந்து வருகின்றது
இதனை முற்றிலும் குறைத்து சுற்றுச் சூழலை பாதுகாப்பதற்காக மகாவலி அதிகார சபை அமைச்சரவைக்கு ஒரு எழுத்து மூலமான விண்ணப்பம் ஒன்றையும் விடுத்திருக்கின்றது
எனவே அது அமைச்சரவையில் நிறைவேற்றப்படுமாக இருந்தால் நாட்டில் பொலித்தீன் பாவனையை முற்றாக ஒழிக்கலாம் என நினைக்கிறேன்
இதற்கு மேலதிகமாக அண்மையில் நாம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் இலங்கையின் மத்திய பகுதிகளில் இருந்து தான் அதிகமான கழிவுகள் , பிளாஸ்டிக் போத்தல்கள், பொலித்தீன் போன்றவை கலக்கப்படுவதாக அறிய முடிகின்றது.
நாட்டில் இருக்கின்ற மிக முக்கிய 105 ஆறுகளில் இருந்தும் சட்ட விரோத மணல் அகழ்வும் நடைபெறுகின்றது
இது தொடர்பில் இதுவரை பலர் கைது செய்யப்பட்டு இருக்கின்ற நிலையில் தொடர்ச்சியாக சுற்றுச் சூழலை பாதுகாக்க மகாவலி அபிவிருத்தி அதிகார சபை முனைப்புகளை காட்டும். எனவே கடலிலும் ஆறுகளிலும் குப்பைகளை கொட்டுவதை தவிர்க்குமாறும் இந்த நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கிறேன் என்றார்
Related posts:
|
|