பிராந்திய நாடுகளின் முழு ஒத்துழைப்புடன் போதைப்பொருள் வர்த்தகம் ஒழிக்கப்படும் – அமைச்சர் சாகல ரத்நாயக்க!
 Saturday, October 29th, 2016
        
                    Saturday, October 29th, 2016
            
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் போதைப் பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் வேலைத்திட்டத்தில் மிகுந்த கரிசனை காட்டுகின்றனர். போதைப்பொருள் வர்த்தகத்தினால் நாடு என்ற ரீதியில் பல்வேறுபட்ட சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே பிராந்திய நாடுகளின் ஒத்துழைப்புடன் போதைப்பொருள் வர்த்தகம் ஒழிக்கப்படும் என சட்டம், ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்..
போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிராக இந்து சமுத்திர நாடுகளின் உள்ளக அமைச்சர்களின் மாநாடு இன்று காலை பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்று கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
போதைப்பொருள் வர்த்தகத்திற்கெதிராக சர்வதேச ரீதியில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்டுகின்றன. சகல நாடுகளும் இவ்வர்த்தகத்தை ஒழிப்பதற்கு போராடிக் கொண்டிருக்கின்றன. அதன் ஓர் அங்கமாகவே இம்மநாடும் நடைபெறுகிறது. இம்மாநாட்டின் மூலம் இலங்கை, ஏனைய நாடுகள் போதைப் பொருள் வர்த்தகத்தை ஒழிப்பதற்கு முன்னெடுக்ககும் வேலைத்திட்டங்கள் மற்றும் அனுபவங்களைப் பெற்று நடவடிக்கை எடுப்பதற்கும் தயாராக உள்ளது.
போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிப்பதற்கு பிராந்திய நாடுகள் இணைந்து செயற்படுவதுடன் அது தொடர்பிலான தகவல்களையும் பரிமாறிக்கொள்ள வேண்டும். பிராந்திய நாடுகள் இணைந்து செயற்படுவதன் மூலம் வினைத்திறன்மிக்க பிரதிபலனை கண்டுகொள்ள முடியும். மேலும் இம்மாநாட்டின் மூலம் போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிரான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி அதனை செயற்படுத்துவது வரவேற்கத்தக்க பயனைத்தரும் எனவும் எதிர்பார்க்கிறேன்.
இம்மாநாட்டின் பிரதான இலக்கு போதைப்பொருள் வர்த்தகமற்ற இந்து சமுத்திர நாடுகளை கட்டியெழுப்புவதாகும். ஏனெனில் போதைப் பொருள் வர்த்தகத்தினால் சமூகம் பல்வேறுபட்ட சவால்களை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக இளைய சமூகத்தினர் இதனைால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் அபாயகர அவ்டதங்கள் கட்டுப்பாட்டு சபையின் பங்களிப்புடன் போதைப்பொருள் பாவனையிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்களையும் நடைமுறைப் படுத்தவுள்ளோம். அப்பாவனையிலிருந்து மக்களை மீட்பதற்கு சிகிச்சையளித்தல், புனர்வாழ்வளித்தல் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        