பிரதான நகரங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இன்றுமுதல் விடுமுறை – சமுகமளிக்க முடியாத ஆசிரியர்களுக்கு தனிப்பட்ட விடுமுறையாகவும் கருதப்படமாட்டாது – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Monday, June 27th, 2022

மேல் மாகாணம், கொழும்பு வலயம் மற்றும் அதனை அண்மித்த நகரங்களிலும் ஏனைய மாகாணங்களின் பிரதான நகரங்களிலும் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன்படி, இன்று திங்கட்கிழமைமுதல் எதிர்வரும் முதலாம் திகதி வரையில் இந்த பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்து.

குறித்த பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகளை செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் முன்னெடுக்குமாறு கடந்த வாரம் கல்வி அமைச்சு அறிவுறுத்தியிருந்தது.

எனினும் தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக குறித்த பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

எவ்வாறிருப்பினும் கிராமிய பாடசாலைகள் கடந்த வாரத்தை போல் இயங்கும் அதேவேளை, ஆசிரியர்களுக்கு போக்குவரத்து சிரமம் ஏற்படின் செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் மாத்திரம் பாடசாலை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பாடசாலை நடவடிக்கைகள் இடம்பெறும் தினத்தில் போக்குவரத்து காரணங்களுக்காக பாடசாலைகளுக்கு சமுகமளிக்க முடியாத ஆசிரியர்களுக்கு அவர்களது தனிப்பட்ட விடுமுறையாக அது கருதப்படமாட்டாது என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: