பிணை முறி மோசடி  விவகாரம்:  ஜனாதிபதி விடுத்த விசேட அறிவிப்பு!

Wednesday, January 3rd, 2018

சர்ச்சைக்குரிய மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய குற்றவாளிகளை தண்டிக்க தாம் பின்னிற்பதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

பிணை முறி மோசடி தொடர்பில் நாட்டு மக்களுக்கு விடுத்த விசேட அறிவிப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த மோசடியினால் ஏற்பட்ட 11 ஆயிரத்து 145 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மீட்கவும் தாம் பின்னிற்பதில்லை என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

மத்திய வங்கியின் அப்போதைய ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் வழங்கிய உறுதிமொழிகளை நம்பி, பிரதமர் செயற்பட்டிருக்க கூடாது என ஆணைக்குழு வழங்கிய விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் மாத்திரமின்றி போலி சாட்சியம் வழங்கிய குற்றச்சாட்டும் ஆணைக்குழு அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளது

எனவே, அவருக்கு எதிராக போலி சாட்சியம் வழங்கிமை தொடர்பில் குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் விசாரணை ஆணைக்குழு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அர்ஜுன் மகேந்திரன் மற்றும் வங்கி உத்தியோகத்தினர்களினதும் வெளியிலிருந்து செயற்பட்ட நபர்களினதும் நிறுவனங்களினதும் பங்கேற்புடனும் பேர்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனம் சட்டத்திற்கு முரணான வகையில் இலாபத்தை ஈட்டியுள்ளது என்பதை இந்த அறிக்கை கூறுகின்றது

2015 பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற பிணைமுறி ஏலத்தின் மூலம் பேர்பச்சுவல் நிறுவனம் ஆகக்குறைந்து 688 மில்லியன் ரூபாவை இலாபமாக ஈட்டியுள்ளது இந்தத் தொகையானது இந்த விசாரணைக்கு உட்பட்ட காலப்பகுதியில் ஈட்டிய இலாபமாக இருப்பதால் இதைவிட கூடுதலான இலாபத்தை இந்நிறுவனம் ஈட்டியிருக்க கூடுமென ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

விசாரணைகளிலிருந்து வெளிப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இரண்டாம் நிலைச் சந்தையில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல்களின் மூலம் பேர்பச்சுவல் நிறுவனம் பெற்றுக் கொண்டுள்ள ஆகக்குறைந்த இலாபம் 11 ஆயிரத்து 145 மில்லியன் ரூபாவாகும்

இதனால் ஊழியர் சேமலாம நிதி உள்ளிட்ட இதனுடன் தொடர்புடைய  அரச நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நட்டம் 8 ஆயிரத்து 529 மில்லியன் ரூபா ஆகும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின் முடிவுகள் தொடர்பில் மத்திய வங்கியின் உயரதிகாரிகள் செயலிழந்த நிலையில் இருந்ததாகவும், அவர்கள் எந்தவித கேள்விகளையும் எழுப்பாது செயலிழந்த நிலையில் இருந்ததால் தவறான முடிவுகளை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உருவாகியிருக்கலாமென ஆணைக்குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

அத்துடன், அர்ஜுன் மகேந்திரன், முறைகேடான முறையிலும் தவறான முறையிலும் தீர்மானங்களை மேற்கொண்டு பிணைமுறை ஏலம் தொடர்பான செயற்பாடுகளில் சம்மந்தப்பட்டிருப்பதுடன் உள்ளக தகவல்களை வெளித்தரப்பினருக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றார் என்பதும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இவ்வாறான செயற்பாடுகள் மூலம் ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்கு இலாபமீட்டக்கூடிய வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் இந்த அறிக்கை கூறுகின்றது

அர்ஜுன் மகேந்திரனை மத்திய வங்கி ஆளுநர் பதவிக்கு நியமிப்பது தொடர்பான பிரதமின் அதிகாரங்கள் முறையானது என்றும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது

நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்த பிரதமர், அர்ஜுன் மகேந்திரன் மற்றும் சமரசிறி ஆகியோர் பற்றியும் அதிலும் குறிப்பாக அர்ஜுன் மகேந்திரன், கொடுத்த வாக்குறுதி மீது நம்பிக்கை வைத்து செயற்பட்டிருப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார் என்றும், எனினும் பிரதமர் அவர்கள் அப்படி நடந்திருக்கக் கூடாது எனவும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது

இந்த விடயங்கள் கோப் விசாரணைக்குழுவின் முன்னிலையிலும் வெளிப்படுத்தப்பட்டிருந்த போதும் பிரதமினால், அர்ஜுன் மகேந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதையும் இந்த அறிக்கை குறிப்பிடுகின்றது

அலோசியஸ் குடும்பத்தினருக்கு சொந்தமான, அவர்களின் நிர்வாகத்தின் கீழிருந்த வோல்ட் அன் றோ நிறுவனத்தினால் பென்ட் ஹவுஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பென்ட் ஹவுஸ் மாடி வீட்டுக்கு மாதாந்த வாடகை செலுத்தியிருப்பதையிட்டு பொறுப்பேற்க வேண்டியவர் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களே என்பதும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதனால் அவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கப்பட வேண்டுமெனவும், ஆணைக்குழுவின் முன்னால் பொய் சாட்சியம் அளித்தமை தொடர்பில் அவருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கப்பட வேண்டுமெனவும் அவ்வறிக்கையில் முன்மொழியப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

Related posts:

வடக்கில் இன்றுமுதல் கள் விற்பனை நிலையங்களை திறக்க அனுமதி - பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கிரிசாந்த ...
கோதுமை மாவின் விலையை அதிகரிக்காதிருக்க தீர்மானம் - இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன அறிவிப்பு!
இலங்கையில் சினோபார்ம் உற்பத்தி தொழிற்சாலையை திறக்க சீனா ஆர்வம் - பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் தெரி...