ஜனாதிபதி , பிரதமருக்கு நீதிமன்ற அழைப்பாணை!

Tuesday, March 21st, 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு எதிர்வரும் ஜூலை 17ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆராச்சி மேற்குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, பொது வேட்பாளராக களமிறங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அப்போது எதிர்க் கட்சி தலைவராக இருந்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் கையொப்பங்களை போலியாக பயன்படுத்தி திஸ்ஸ அத்தநாயக போலி உடன்படிக்கையை தயாரித்ததாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்து கொள்ளவே குறித்த இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டில் முதலாம் மற்றும் இரண்டாம் சாட்சியாளர்களான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இது தொடர்பாக நேற்று நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த நிலையில், கடமைகள் காரணமாக முன்னிலையாக முடியவில்லை என அவர்கள் நீதிமன்றத்திற்கு  அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: