பால்மா இறக்குமதியைக் கைவிட இறக்குமதியாளர்கள் தீர்மானம் – கடும் செலவினமே காரணம் எனத் தெரிவிப்பு!

Tuesday, January 15th, 2019

கடுமையான செலவினம் காரணமாக இலங்கையின் முன்னணி பால்மா இறக்குமதியாளர்கள் பலர் இறக்குமதியை இடைநிறுத்துவதற்குக் கூட்டாகத் தீர்மானித்துள்ளனர்.

தற்போது செய்வதைப்போன்று இனிமேலும் தாங்கள் வர்த்தக நடவடிக்கைகளைப் பால்மா கம்பனிகள் தொடரமுடியாத நிலைக்குத்தள்ளப்பட்டிருக்கின்றன. இறக்குமதியை நிறுத்துவதுடன் தற்போதைய கையிருப்பை விற்பனை செய்வதையும் நிறுத்துவதைத் தவிர கம்பனிகளுக்கு வேறு மார்க்கம் இல்லை என்று இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பால்மா பைக்கற்றுகளின் விலையை அதிகரிக்க அரசு அனுமதிக்காவிட்டால் விரைவில் பால்மாவுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என்று பல பால்மா கம்பனிகளின் தலைவர்கள் தெரிவித்தனர்.

இந்த கம்பனிகளுக்கு மாதாந்தம் 3 – 4 கோடி ரூபா இழப்பு ஏற்படுகிறது. துறைமுகத்தில் இருக்கும் பால்மா கையிருப்பை விடுவிக்காமல் இருக்கவும் பால்மா விலையை 100 ரூபாவால் அதிகரிக்க அரசு அனுமதியளிக்காத பட்சத்தில் புதிய இறக்குமதிக்கான கோரிக்கைகளை விடுக்காதிருக்கவும் கம்பனிகள் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றன என்று அவர்கள் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.

உலகச் சந்தையில் ஒரு மெட்ரிக் தொன் பால்மாவுக்கான விலை இப்போது 3 ஆயிரத்து 250 3ஆயிரத்து 350 அமெரிக்க டொலர்களாக இருக்கிறது. இது 3 ஆயிரத்து 400- 3 ஆயிரத்து 500 டொலர்களாக அதிகரிக்கக் கூடும்.

இத்தகைய பின்புலத்தில் இறக்குமதிச் செலவுகளைச் சமாளிப்பதற்கு வசதியாக ஒரு கிலோ பால்மாவின் விலையை 100 ரூபாவால் அதிகரிக்க தங்களை அனுமதிக்குமாறு பால்மா கம்பனிகள் பாவனையாளர் விவகார அதிகார சபையையும் வாழ்க்கைச் செலவுக் கமிட்டியையும் கேட்டிருக்கின்றன. பால்மா மீதான விலைக்கட்டுப்பாட்டையும் பெறுமதிசேர் வரியையும் நீக்குவதே இந்தப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்று கம்பனிகள் யோசனை கூறுகின்றன.

Related posts: