பாலன் பிறப்பு பண்டிகை – நாடளாவிய ரீதியில் மக்கள் கொண்டாட்டம்!

Saturday, December 25th, 2021

இயேசு கிருஸ்து அவதரித்த தினமான டிசம்பர் 25 ஆம் திகதி நத்தார் தினமாக உலகம் முழுவதும் உள்ள கிருஸ்தவர்கள் கொண்டாடப்பட்டுவருகின்றது

இதன்படி, இலங்கை முழுவதும் நேற்று நள்ளிரவுமுதலேயே சிறப்பு பிரார்த்தனைகளுடன் நத்தார். கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ளன.

கொரோனா பரவலைக் கருத்திற்கொண்டு சமூக இடைவெளியைப் பின்பற்றி, சுகாதார கட்டுப்பாடுகளுடன் மக்கள் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

அத்தோடு கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள தேவாலயங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் இயேசு பாலகனின் பிறப்பான கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களில் உள்ள தேவாலயங்களில் விசேட நத்தார் நள்ளிரவு திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன.

இதனடிப்படையில் யாழ். மறை மாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி யாழ். புனித மரியன்னை ஆலயத்தில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்டின் ஞானபிரகாசம் ஆண்டகை தலைமையில் கூட்டு திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இதன்போது ஆலயத்தினுள் அமைக்கப்பட்டுள்ள யேசு பாலகனின் பிறப்பை வெளிப்படுத்தும் பாலன் குடில் ஆயரினால் ஒளியேற்றப்பட்டு விசேட ஆராதனைகள் இடம்பெற்றன.

இந்த நத்தார் நள்ளிரவு திருப்பலியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு யேசு பாலகனின் பிறப்பை கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதேவேளை மன்னார் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில்  கிறிஸ்மஸ் ஆராதனைகள் நடைபெற்றன. மன்னார் மாவட்டத்தின் பிரதான கிறிஸ்மஸ் நள்ளிரவு திருப்பலி  மாவட்டத்தின் முதல் பேராலயமான மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தலைமையில் அருட்தந்தையர்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.

இதன்போது இயேசு பிறப்பினை குறிக்கும் வகையில் நள்ளிரவு பாலன் திருச்சொரூபம் வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கிறிஸ்மஸ் ஆராதனைகள் நடைபெற்றது.

குறித்த ஆரானைகளின்போது கொரோனா அச்சுறுத்தலில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்கவும் நாட்டில் நீடித்த அமைதியும், மகிழ்ச்சியும் நிலவவும் விசேட பிரார்த்தனையும் ஆயரினால் நடத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து கிறிஸ்மஸ் விசேட கூட்டுத்திருப்பலியை ஆயர் அருட்தந்தையர்கள் இணைந்து ஒப்புக்கொடுத்தனர்.

இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் கொரோனா வழிமுறைகளை பின்பற்றியவாறு கிறிஸ்மஸ் ஆராதனைகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான கிறிஸ்மஸ் வழிபாடுகள் மாவட்டத்தின் முதல் பேராலயமான புளியந்தீவு புனித மரியால் பேராலயத்தில் சிறப்பாக நடைபெற்றன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சமூக இடைவெளிகளை பேணியவாறு பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டன.

மரியால் பேராலயத்தில் பேராயர் ஜோசப்பொன்னையா ஆண்டகை தலைமையில் இதன்போது விசேட ஆராதனைகள் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: