பாரதிபுரம் ஆடை தொழிற்சாலையை மீள இயங்க கரைச்சி பிரதேச செயலர் தலைமையில் ஆலோசனை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடமிருந்து தேவையான உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்கும் இணக்கம்!
Wednesday, February 21st, 2024கரைச்சி பாரதிபுரம் மேற்கு கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள ஆடை தொழிற்சாலையை மீள இயங்க வைப்பதற்கான ஆலோசனை கலந்துரையாடல் இன்று (21) கரைச்சி பிரதேச செயலர் தலைமையில் நடைபெற்றது.
குறித்த பகுதி கிராம சேவகர் அலுவலகத்தில் நடைபெற்ற இச் சந்திப்பில் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் பிரதிநிதிகள் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய பெண்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதனை மீள இயங்க வைப்பதற்கான ஏற்பாடாக கிராமத்தில் புதிய நிர்வாகத்தை உருவாக்கி கிராமத்தின் சொத்தாக இவ் ஆலையை செயற்படுத்துதல், அல்லது புதிய வேறொரு முயற்சியாளருக்கு ஒப்பந்த அடிப்படையில் வாய்ப்பளித்தல், மற்றும் தையல் இயந்திரங்களை பொருத்தமான பயனாளிகளுக்கு தனித்தனியாக பகிர்ந்தளித்தல் என பல்வேறு வழிமுறைகள் இன்றைய சந்திப்பில் கலந்துரையாடப்பட்டன.
குறித்த மாதர் சங்கம் இதனை முறையாக பொறுப்பேற்று நடத்த முன்வரும் பட்சத்தில் நிலுவையாகவுள்ள மின் கட்டணம் மற்றும் ஊழியர்கள் கொடுப்பனவை குறித்த ஒப்பந்ததாரரிடம் இருந்து மீள அறவிடுவதற்கான வழிவகைகள் மற்றும் ஒப்பந்ததாரரிடம் உள்ள தொழிற்சாலையின் பொறுப்புக்கள் சொத்துக்களை மாதர் அபிவிருத்தி சங்கம் பிரதேச செயலகத்திடம் மீள ஒப்படைப்பதற் கான ஏற்பாடுகளும் கவனம் செலுத்தப்பட்டன.
இந்த ஆலையை பொறுப்பேற்று நடத்துவதற்கான கூட்டான தீர்மானத்துக்கு வசதியாக தமக்கு ஒருவார கால அவகாசம் வழங்க பொது அமைப்புகள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இதற்கான உரிய கால அவகாசத்தில் முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு பிரதேச செயலர் கேட்டுக்கொண்டார்.
உறுதியான புதிய நிர்வாக கட்டமைப்பு உருவாக்கப்படும் பட்சத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஆலோசனை வழிகாட்டலுடன் தேவையான உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்கான வழிவகைகள் குறித்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் தனது ஆலோசனையை இச்சந்திப்பில் முன்வைத்தார்.
கிராமத்தின் அனைத்து இளைஞர் யுவதிகளுக்கான தொழில்வாய்ப்புக்கு வசதியாக இவ் ஆலையை முறையாக நிர்வகிக்க தாம் சித்தமாக இருப்பதாக அங்கு கலந்துகொண்ட பலரும் கருத்து தெரிவித்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|