பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

Wednesday, January 22nd, 2020

பொது மக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பகுதிகளுக்கு முப்படையினரை அனுப்புவது குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள இந்த வர்தமானி அறிவித்தல் இன்றுமுதல் (22) அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அவசரகால சட்டம் நீக்கப்பட்டதை அடுத்து முன்னாள் ஜனாதிபதியினால் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதுடன், அதன்பின்னர் குறித்த வர்த்தமானி அறிவிப்பு ஒவ்வொரு மாதமும் பொது மக்கள் கட்டளை சட்டத்திற்கமைய ஜனாதிபதியால் வெளியிடப்படுகின்றது.

இதற்கு முன்னர் கடந்த டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, நுவரெலியா, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் புத்தளம் ஆகிய நிர்வாக மாவட்டங்களுக்கு இந்த உத்தரவு அமுலாகின்றது.

அத்துடன் மேற்குறித்த பிரதேசங்களுக்கு உட்பட்ட கரையோரங்களும் இதற்குள் உள்ளடங்குவதுடன் அதற்கமைய இந்த பகுதிகளில் ஆயுத படைகளை நிலைநிறுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேலும், கண்டி, மாத்தளை, கிளிநொச்சி, வவுனியா, குருணாகல், அனுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய நிர்வாக மாவட்டங்களும் இந்த வர்தமானி அறிவிப்புக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

Related posts: